ராம்குமார் முதல் இளையராஜா வரை.... தொடரும் புழல் சிறை தற்கொலைகள்
கடும் பாதுகாப்பு நிறைந்த புழல் சிறையில் கைதிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை : ஐடி ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இப்போது ஆசிரியையை கார் ஏற்றி கொலை செய்த கைதி இளையராஜா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்த கட்டுபாடுகளும், கண்காணிப்பும் உள்ள சிறைச் சாலையில், மின்கம்பியை பல்லால் கடித்து தற்கொலை முயற்சியில் ராம்குமார் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ராம்குமார் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது.
இதனால், தமிழகத்தில் பட்டப்பகலில் நடைபெற்ற ஐ.டி. துறையைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுவாதி கொலையில் எந்தவித தடயமும் இல்லாமல் போனது. ராம்குமார் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற உண்மைகளும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டன.
வயரை கடித்த கைதி
டில்லி ராஜா என்ற கைதி ராம்குமார் ஸ்டைலில் மின்சார கம்பியை வாயால் கடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். செல்போன் திருட்டு வழக்கில் கைதான இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
குண்டூசியை விழுங்கிய அப்பு
அப்பு என்ற கைதி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஊசியை விழுங்கி விட்டார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி அப்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூக்குப் போட்டு தற்கொலை
சென்னை அண்ணாநகரில் அரசு பள்ளி ஆசிரியை நிவேதிதாவை காரை ஏற்றி கொலை செய்த வழக்கில் தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் புழல் சிறையில் கழிவறையில் தூக்கு போட்டு கைதி இளையராஜா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்
புழல் சிறையில் இதுபோன்று தற்கொலைகள் நடைபெற்று வருவதால், புழல் சிறையில் உள்ள கண்காணிப்பு பணியில் அசட்டை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். எனவே, புழல் சிறையில் கண்காணிப்பை முறைப்படுத்தி சிறையில் உள்ள கைதிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையும் தற்கொலையும்
கடந்த 2016ஆம் ஆண்டு அதிக அளவில் ஒருதலைக்காதல் கொலைகள் நடைபெற்றன. தூத்துக்குடி ஆசிரியை பிரான்சிஸ்காளை அப்பகுதியில் வாழ்ந்து வரும் கீகன் ஒரு தலைப்பட்சமாக காதலித்தோடு தன்னை மட்டும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தி வந்துள்ளார். பிரான்சிஸ்காளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து பேசிமுடிக்கவே ஆத்திரமடைந்த கீகன், வெட்டிக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இப்போது மீண்டும் பெண்களை கொன்றுவிட்டு கொலையாளிகள் தற்கொலை செய்வது தொடங்கி விட்டது.