பிரான்ஸ் தமிழச்சியின் கருத்தின் அடிப்படையில் சுவாதி கொலை வழக்கை விசாரிக்க வக்கீல் வலியுறுத்தல்!!
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் பிரான்ஸைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் பதிவிட்டிருந்த கருத்தின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்று ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் கூறி அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ராம்குமார் தரப்போ சுவாதி கொலை வழக்கில் நிறைய பேருக்கு தொடர்பு உண்டு; இதில் ராம்குமார் பலிகடாவாக்கப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டி வருகிறது.
தமிழச்சி கருத்தால் பரபரப்பு
இந்த நிலையில் பிரான்ஸை சேர்ந்த பெரியாரிஸ்டான தமிழச்சி தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், சுவாதியை கொலை செய்தது முத்துக்குமார் என்பவர்தான்... அவர் தற்போது தஞ்சையில் பதுங்கியுள்ளார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதை நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளமும் பதிவு செய்திருந்தது.
போலீசார் விசாரிக்க வேண்டும்
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியதாவது:
பிரான்ஸ் தமிழச்சி வெளியிட்ட கருத்துகளுக்கு சுவாதி பெற்றோர் தரப்பில் எந்த பதிலுமே தெரிவிக்கவில்லை. தமிழச்சி தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்த வேண்டும்.
சட்டப்படி தவறு
ராம்குமாரை சிறையில் போலீசார் வீடியோ எடுத்தது அரசியல் சாசன சட்டப்படி தவறானதாகும். இந்த வழக்கில் உண்மை குற்றவாளியை தப்பவிட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் போலீசார் செயல்படுகின்றனர்.
சிபிஐ விசாரிக்க கோரி மனு
சுவாதி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 17-ந் தேதியன்று ராம்குமாரின் தாயார் வழக்கு தொடர உள்ளார். இவ்வாறு ராமராஜ் கூறினார்.