சுப்ரீம் கோர்ட் போகும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு… அதுவரை தடை விதிக்க கோரி மனு
சென்னை: ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் ஹைகோர்ட் கைவிரித்துவிட்டதால் சுப்ரீம் கோர்ட்டை பரமசிவம் நாட உள்ள நிலையில் அதுவரை ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று கோரி தந்தை பரமசிவம் சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வழக்கு 3வது நீதிபதி கிருபாகரனிடம் மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்கலாம் என்றும் செப். 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனை செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த தந்தை பரமசிவம் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு உத்தரவிட மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தினார்.
இந்நிலையில், அடுத்தடுத்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை வருகிறது. மனுவை தாக்கல் செய்யவே திங்கள் செவ்வாய் ஆகிவிடும். நீதிபதி கிருபாகரன் வேறு செப். 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். 27ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுமா என்று தெரியவில்லை. அதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்ற நிலையில், நீதிபதி கிருபாகரன் உத்தரவுக்கு தடை கோரி பரமசிவம் சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.