For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொலைக்குப் பின்னர் ஊர் திரும்பி வீட்டோடு முடங்கிய ராம்குமார்.. தந்தை தகவல்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: சுவாதியைப் படுகொலை செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய ராம்குமார் கடந்த ஒரு வாரமாக வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வந்ததாக அவரது தந்தை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸில் பணியாற்றி வந்த இளம் சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி ஜூன் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காக அவர் ரயிலுக்குக் காத்திருந்தபோது மர்ம நபர் அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பினார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது பெரும் மர்மமாக இருந்து வந்தது.

Ramkumar returned to his village after killed Swathy - Police

இடையில் இந்தக் கொலையில் மதத்தையும், சாதியையும் கலந்து சிலர் வதந்தி பரப்பவே பெரும் பதட்டமாகிப் போனது. இந்த நிலையில் கொலையாளியை போலீஸார் செங்கோட்டை அருகே பண்பொழி கிராமத்தில் வைத்து பிடித்துள்ளனர். அந்த நபரின் பெயர் ராம்குமார். என்ஜீனியரிங் படித்துள்ளார். வேலை தேடி வந்தார்.

கடந்த 3 மாதமாக சென்னை சூளைமேட்டில் சுவாதி வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மேன்ஷனில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார். அப்போதுதான் சுவாதியைப் பார்த்து அவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். ஆனால் இதை சுவாதி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தக் கொலை நடந்துள்ளது.

மேன்ஷன் நிர்வாகி கொடுத்த தகவல்

ராம்குமாரை போலீஸார் பத்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். ஆனால் எந்தத் துப்பும் துலங்கவில்லை. இதனால் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். கொலையாளியின் படத்தை வைத்து வீடு வீடாக தேடுதல் வேட்டை நடந்தது. இந்த நிலையில்தான் சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனின் நிர்வாகி புகைப்படத்தைப் பார்த்து விட்டு அது ராம்குமார் என்று போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து நெல்லை விரைந்த போலீஸ் படை பண்பொழி கிராமத்தில் ராம்குமாரின் வீட்டை முற்றுகையிட்டது. போலீஸாரைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராம்குமார் தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

குடும்பத்தாரிடம் விசாரணை

ராம்குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரது தந்தை, சகோதரி, சகோதரனிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது மகன் வீடு திரும்பியதாகவும், வந்தது முதல் வீட்டை விட்டு வெளியே போகவில்லை என்றும் ராம்குமாரின் தந்தை போலீஸாரிடம் கூறியுள்ளார். அதாவது கொலை செய்த பின்னர் ஊர் திரும்பிய ராம்குமார், வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்துள்ளார்.

இந்தக் கொலையில் ராம்குமாரின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. அவரையும் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரும் சிக்குவார் என்று தெரிகிறது.

போலீஸார் நடத்திய விசாரணையிலிருந்து சுவாதியை ராம்குமார் ஒரு தலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

தீவிர சிகிச்சை

இதற்கிடையே கழுத்தை அறுத்துக் கொண்ட ராம்குமாருக்கு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வார்டுக்கு வெளியேயும், மருத்துவமனைக்கு வெளியேயும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Police sources said that Ramkumar returned to his village after killed Swathy and did not come out of the house for the last one week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X