ராம்குமார் மரணம்: சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் ராம்ராஜ் மனு
சென்னை: சென்னை: ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் இன்று காலை 10.30 மணிக்கு மனு தாக்கல் செய்கிறார். ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ஞாயிறன்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற பிறகு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இந்நிலையில் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பார்க்க வந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நேற்று காலை 11.30 மணி முதல் 1 மணிவரை ராம்குமாரை அவர் சந்தித்துள்ளார். ராம்குமாரின் பாதுகாப்பு பற்றி கேட்டதற்கு தான் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று சிறை காவலர் விஜயகுமார் என்பவர் இட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளதால், திட்டமிட்டு ராம்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமாரிடம், நிச்சயம் ஜாமீன் கிடைத்து விடும் என்று கூறியிருந்தேன். சுவாதி கொலையில் முக்கிய தடயங்கள் இருப்பதாகவும், ஜாமீன் கிடைத்த உடன் அதை வெளியே கூறுவதாகவும் சொல்லியிருந்தார். இந்த நிலையில் இப்போது இறந்து விட்டதாக கூறுகின்றனர். ராம்குமாரை என்னுடைய மூத்த மகனைப் போல பார்த்துக்கொள்வதாக அவரது பெற்றோரிடம் சொல்லியிருந்தேன். இப்போது ராம்குமார் இறந்து விட்டார். அவரின் பெற்றோர்களுக்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று கண்ணீர் விட்டார் வழக்கறிஞர் ராம்ராஜ்.
ராம்குமார் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறையிடுவேன். ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையை முறையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துவேன் என்றும் வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார்.