ராம்குமார் உடலைப் பார்க்க வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு.. உறவினர்கள் சாலை மறியல்
சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடலைப் பார்க்க அவரது வக்கல்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதைக் கண்டித்து வக்கீல்களும், ராம்குமாரின் உறவினர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று மாலை திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் மின் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து காவல்துறை மெளனமாக உள்ளது.
இந்த நிலையில் ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடலைப் பார்க்க வழக்கறிஞர் ராமராஜ் உள்ளிட்ட வக்கீல்கள் வந்தனர். ஆனால் அவர்களை உள்ளே விட போலீஸார் மறுத்து விட்டனர். இதனால் போலீஸாருடன் வக்கீல்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையின் போக்கைக் கண்டித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ராம்குமாரின் மரணத்திற்கு போலீஸாரே காரணம் என்று கூறி ராம்குமாரின் உறவினர்களும், தந்தை பெரியார் தி.கவினரும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் சாலையை மறித்து அமர்ந்து போராடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானப்படுத்திய பின்னர் அனைவரும் எழுந்து சென்றனர்.
ராயப்பேட்டை மருத்துவமனை வளாகம் தொடர்ந்து பதட்டமாக உள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.