ராம்குமார் உடலை ஒரு மாதத்திற்கு பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.. கேஎம்சி முதல்வர் தகவல்
சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள ராம்குமாரின் உடலுக்கு பாதிப்பில்லை என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிறன்று சிறைவளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் கூறினாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. இதனால் ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தங்களது மருத்துவரையும் இடம் பெறச் செய்ய வேண்டும் என அவரது தந்தை வழக்குத் தொடர்ந்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களாக அவரது உடல் பிணவறையிலேயே உள்ளது.
இந்நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதால் ராம்குமாரின் உடலுக்கு பாதிப்பில்லை என சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயண பாபுதெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், "ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடைய பிணவறையில் ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையானது 5 டிகிரி குளிர் பதத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தோலின் நிறத்தில் கூட வேறுபாடு ஏற்படாது. ஒரு மாத காலத்துக்கு இதே நிலையில் பராமரிக்க இயலும். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெறும். அதற்கான 4 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.