ராம்குமார் சட்டையில் உள்ள ரத்தம் சுவாதியுடையது தான் - போலீஸ் தகவல்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் சட்டையில் படிந்திருந்தது சுவாதியின் ரத்தம் தான் என்பது டி.என்.ஏ., ஆய்வில் உறுதியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவாதி கொலை செய்யப்பட்டபோது ராம்குமார் அணிந்திருந்த சட்டையை போலீசார் கைப்பற்றி இருந்தனர். அந்த சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. அது சுவாதியின் ரத்தமா என கண்டறிய ஹைதராபாத்தில் உள்ள டி.என்.ஏ., ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
ஹைதராபாத் ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்தமும், சுவாதியின் ரத்த மாதிரியும் ஒத்துப்போனது உறுதியாகியுள்ளது என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்
ஜூன் 24ம் தேதியன்று சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ராம்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த நிலையில் ராம்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள், அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டை உள்ளிட்டவை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் முடிவுகள் தற்போது போலீஸாருக்கு வந்து சேர்ந்துள்ளது. அதில் அரிவாளில் கைரேகை எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ராம்குமாரின் சட்டையில் உள்ள ரத்தம் சுவாதியுடையது என்று போலீஸார் திடமாக நம்புகின்றனர்.
விரைவில் தடயவியல் ஆய்வறிக்கை எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.