கல்லூரிக் காலத்திலேயே ‘காதல்’ தகராறில் ஈடுபட்ட ராம்குமார்..!
நெல்லை: நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை இளைஞர் ராம்குமார், தனது கல்லூரி காலத்திலேயே இளம்பெண் ஒருவருடன் காதல் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த மாதம் சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், கொலையாளி குறித்த துப்பு துலங்காமல் ஆரம்பத்தில் இந்த வழக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
பின்னர் ரயில் நிலையங்களுக்கு அருகே இருந்த கட்டிடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொலையாளி குறித்த துப்பு துலங்கியது. கூடவே, சுவாதியின் செல்போன் சிக்னலும் கொலையாளி குறித்த போலீசாரின் விசாரணைக்கு உதவியது.
கைது...
அதன் தொடர்ச்சியாக சுவாதி கொலை செய்யப்பட்டு 8 நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் இரவு, செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியில் கொலையாளி ராம்குமாரைப் போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை முயற்சி...
போலீசார் சுற்றி வளைத்ததும் தற்கொலைக்கு முயன்ற ராம்குமார், தற்போது மருத்துவமனயில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் அவரிடம் தெளிவான வாக்குமூலம் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சைக்கோ போல்...
இந்நிலையில், ராம்குமார் குறித்து அவருடன் படித்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் மூலம் பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, சுவாதி கொலைக்கு பின் சொந்த ஊர் திரும்பிய ராம்குமார் அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரிடமும் பேசாமல் சைக்கோ போல் செயல்பட்டுள்ளார். சில நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய அவர், பின்னர் தான் சற்று சகஜநிலைக்கு வந்துள்ளார்.
கல்லூரிக் காதல்...
அதுமட்டுமின்றி, கல்லூரியில் படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார் ராம்குமார். ஆனால், அப்பெண்ணிடமும் அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளக்கூறி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
நண்பர்கள் இல்லை...
மேலும், அவருக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ நட்பு வட்டாரம் கிடையாது என்று கூறப்படுகிறது. கல்லூரி விடுமுறை நாட்களில் காட்டு வேலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
பெற்றோரின் கனவு...
அவரது தந்தை பரமசிவன் தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்பியுள்ளார். பரமசிவனின் மூத்த மகள் எம்ஏ படித்து விட்டு செங்கோட்டை அருகே தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இன்னொரு மகள் கல்லூரியில் பிஏ படித்து வருகிறார்.
படிப்பதற்காக...
நெல்லை அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த ராம்குமார் 4 பாடங்களில் அரியர்ஸ் வைத்துள்ளார். இதை எழுதுவதற்காகவே அவர் சென்னைக்கு வந்ததாகத் தெரிகிறது. மேன்சனில் சேரும் படிவத்திலும் தன்னை மாணவர் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜவுளிக்கடையில் வேலை...
அதுமட்டுமின்றி, வருமானத்திற்கு அருகில் இருந்த ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது பெற்றோரிடமே இந்த விவகாரத்தை அவர் மறைத்துள்ளார். தங்கள் மகன் சென்னையில் படித்து கொண்டிருப்பதாகவே அவர்கள் நினைத்துள்ளனர்.
குடும்பத்தாரிடம் மௌனம்...
சுவாதி கொலைக்கு பின் ஊர் வந்த ராம்குமார் சென்னையில் தான் ஒரு பெண்ணை கொன்ற விபரம் எதையும் தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து முகத்தில் எவ்வித சலனமும் காட்டாமல் பதற்றமின்றி நடமாடி வந்துள்ளார்.