ராம்குமார் மர்ம மரணம்.... சர்ச்சைகளின் சங்கமமான சுவாதி கொலை வழக்கு
சென்னை: சாப்ட்வேர் பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட நாள் முதல் ராம்குமார் மர்ம மரணம் வரை இந்த வழக்கு சர்ச்சைகளின் சங்கமமாக இருந்து வருகிறது.
சுவாதி கொலை வழக்கில் இதுவரை....
ஜூன் 24
சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை 6. 40 மணியளவில் அடையாளம் தெரியாத ஒரு நபரால் கொலை செய்யப்பட்டார். உடனேயே நடிகர்கள் எஸ்வி சேகர், ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் பிலால் என்பவருக்கு இக்கொலையில் தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஜூன் 27
இக் கொலை வழக்கு ரயில்வே காவல்துறையிடமிருந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதே நாளில் ஒரு சிசிடிவி வீடியோவை காவல்துறை வெளியிட்டது.
ஜூலை 1
திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ராம்குமார் என்ற இளைஞனை சுவாதி வழக்கு தொடர்பாக போலீசார் கைது செய்தனர். அப்போது ராம்குமார் தன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக போலீஸார் கூறினர்.
ஜூலை 6
ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமாரின் வழக்கறிஞர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜுலை 12,
சிறையில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் ராம்குமாரை அடையாளம் காட்டினார்.
ஜூலை 13
ராம்குமாரை மூன்று நாள் போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க மாஜிஸ்ட்ரேட் அனுமதி தந்தார்.
ஆகஸ்டு 19
ராம்குமாரின் அம்மா புஷ்பம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
செப்டம்பர் 2
சுவாதி கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செப்டம்பர் 18
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சர்ச்சைகள்
இந்த வழக்கில் தொடக்கம் முதலே பிலால் என்பவர் பெயர் அடிபடத் தொடங்கியது. பின்னர் பிலால் சுவாதியின் நண்பர் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் பிலாலும் சுவாதியும் திருமணம் செய்து கொண்டனர் எனவும் கூறப்பட்டு வருகிறது...
ஐபி விசாரணை
சுவாதியின் லேப்டாப்பில் இருந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் கடத்தப்பட்டதாகவும் ஒரு சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக உளவுத்துறையினர் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
மர்ம நபர்கள்
மேலும் சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் இரு சக்கர வாகனத்தில் தப்பிய 2 மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தமிழச்சி, திலீபன் மகேந்திரன்
இக்கொலை வழக்கு தொடர்பாக திலீபன் மகேந்திரன், தமிழச்சி ஆகியோர் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்காக திலீபன் மகேந்திரன், அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இன்றும் தமிழச்சி, சுவாதி கொலை வழக்கில் மணி என்பவருக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளார்.