உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு - ராம்குமார் வழக்கறிஞர் பேட்டி
சென்னை: பிரேத பரிசோதனை வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி கிருபாகரனின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராம்குமாரின் வழக்கறிஞர் சங்கரசுப்பு தெரிவித்தார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது, தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று, அவரது தந்தை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளின் அமர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால், 3வது நீதிபதியின் கருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் இன்று மாலை தனது தீர்ப்பை அறிவித்தார். அதன்படி அரசு டாக்டர்களே பிரேதப் பரிசோதனையை நடத்தலாம் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், அத்துடன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரும் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
செப்டம்பர் 27ம் தேதிக்குள் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். தனியார் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். 3 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பை அளித்துள்ளதால் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை அணுக முடிவு செய்துள்ளோம். மேலும், இதுதொடர்பாக நாளை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.