ராம்குமார் ஒரு "அக்யூஸ்ட்".. அப்படித்தான் பார்க்கனும்... ஜாதி சாயம் பூசக் கூடாது- எஸ்வி சேகர்
திருச்சி: ராம்குமார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட "அக்யூஸ்ட்". அவரை அதுபோல மட்டுமே பார்க்க வேண்டும். அவர் மீது ஜாதிச் சாயம் பூசக் கூடாது என்று நடிகர் எஸ்வி. சேகர் கூறியுள்ளார்.
சுவாதி கொலை தொடர்பாக பேஸ்புக்கில் முன்பு கமெண்ட் ஒன்றை பார்வர்ட் செய்து பரபரப்பைக் கிளப்பியவர்கள் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் எஸ்வி.சேகர் ஆகியோர். இந்த நிலையில் ராம்குமார் மரணம் தொடர்பாக ஒய்.ஜி. மகேந்திரன் இதுவரை கருத்து எதையும் கூறவில்லை. ஆனால் எஸ்வி சேகர் வாய் திறந்துள்ளார்.
திருச்சி வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 30 வருடமாக கட்டுக்குள் இருந்த ஜாதியம் இப்போது மீண்டும் தலை காட்டத் தொடங்கியுள்ளது. அதுவும் முன்பை விட வீரியமாக அது வந்துள்ளது. மக்கள் அக்யூஸ்டுகளை அக்யூஸ்டுகளாக மட்டுமே பார்க்க வேண்டும்.
ராம்குமார் ஒரு வழக்கி் குற்றம் சாட்டப்பட்ட அக்யூஸ்டு. அவரை அந்த அளவுக்கு மட்டுமே பார்க்க வேண்டும். அவருக்கு ஜாதிச் சாயம் எல்லாம் பூசக் கூடாது.
சமூககம் சீர்குலைந்து போனதற்கு சினிமாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சினிமாவுக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது. இது இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பதில் சந்தேகமே இல்லை என்றார் சேகர்.