சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ராம்மோகன் ராவ்.. விரைவில் கைது செய்யத் திட்டம்?
சென்னை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன ராவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ள சேகர் ரெட்டிக்கும் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவிற்கு உள்ள நெருக்கமானத் தொடர்பை அடுத்து, ராம்மோகன் ராவ் வீட்டையும் வருமானவரித் துறையினர் சோதனையிட்டத்தில் லட்சக் கணக்கான பணமும், தங்கமும், ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், அவரது பதவியும் கையோடு பறிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எந்த நேரமும் ராம்மோகன் ராவ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக நேற்று முன் தினம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இன்று, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உடல்நலம் தேறிய நிலையில் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். விரைவில் ராம்மோகன் ராவ்யை கைது செய்ய வருமானவரித் துறையினர் திட்டம் தீட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றன.