சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் ராம்மோகன் ராவ்… கைது எப்போது?
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
சென்னை: நெஞ்சுவலி காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், வருமானவரிச் சோதனையில் சிக்கி தனது பதவியை இழந்தார். அவருடன் தொடர்புடைய மகன் விவேக், வழக்கறிஞர் அமலநாதன் என பலரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். மேலும், அவர்களிடம் வருமானவரித் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனால், ராம்மோகன் ராவிற்கு நெருக்கடி முற்றியது. இதனைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகக் கூறி சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனை, தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டித்தன.
இந்நிலையில், 24ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராம்மோகன் ராவ் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.