குடியரசுத் தலைவர் தேர்தல்: சென்னை வந்தார் ராம்நாத் கோவிந்த் - மீராகுமாரும் வருகிறார்
குடியரசுத்தலைவர் தேர்தலுக்காக ஆதரவு திரட்டுவதற்காக ஆளுங்கட்சி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு திரட்ட வேட்பாளர்கள் ராம்நாத் கோவிந்த் சென்னைக்கு வந்துள்ளார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாரும் இன்று சென்னைக்கு வரவுள்ளனர். தங்களின் ஆதரவு கட்சிகளைச் சார்ந்த வேட்பாளர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
சென்னை வருகை
வேட்பாளர்கள் 2 பேரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் ராம்நாத் கோவிந்தும், மீரா குமாரும் இன்று சென்னை வருகின்றனர்.
ராம்நாத் கோவிந்த்
ஆளும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை 11 மணிக்கு சென்னைக்கு வருகை தந்தார். சென்னை விமான நிலையம் வரும் அவரை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
ஐடிசி கிராண்ட் சோழா
விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள ராம்நாத் கோவிந்த் மாலை 3 மணிக்கு அதே ஓட்டலில், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும், அங்கு வருகை தரும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரே ஒரு பா.ஜ.க. எம்.பி.யான ஓ.ராஜகோபாலையும் அவர் சந்திக்கிறார்.
வாக்கு சேகரிக்கிறார்
அங்கிருந்து மாலை 4 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்திற்கு வரும் ராம்நாத் கோவிந்த், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
கலைவாணர் அரங்கத்தில்..
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு ராம்நாத் கோவிந்த் வருகிறார். அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களிடம் அவர் ஆதரவு திரட்டுகிறார். இரவு 8 மணிக்கு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு அவர் டெல்லி திரும்புகிறார்.
மீரா குமார் வருகை
இதேபோல், காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீராகுமார் இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையம் வரும் அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு ஆகியோர் வரவேற்கின்றனர்.
ஸ்டாலினுடன் சந்திப்பு
விமான நிலையத்தில் இருந்து, நேராக ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு வரும் மீராகுமார் மாலை 6 மணிக்கு அதே ஓட்டலில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்களை அவர் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மேலும், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களையும் அங்கேயே மீராகுமார் சந்திக்கவுள்ளார்.
கருணாநிதியை சந்திக்கிறார்
இரவு 8 மணிக்கு கோபாலபுரத்திற்கு வரும் மீராகுமார், தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். அங்கிருந்து விமான நிலையம் செல்லும் அவர் இரவு டெல்லி புறப்படுகிறார்.