ஜனாதிபதி தேர்தல் : ராம்நாத் கோவிந்த், மீராகுமார் சென்னையில் முகாம்
குடியரசுத்தலைவர் தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
14வது குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 17ஆம்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்.
தமிழகத்தில் ஆதரவு திரட்டுவதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார்.
இதே போல், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாரும் இன்று சென்னை வந்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களையும், எம்.பி., எம்எல்ஏக்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.