கடையநல்லூரில் ரம்ஜான் பெருநாள் தொழுகை 6000 பேர் பங்கேற்பு
திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த ரம்ஜான் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகே உள்ள ஈத்கா திடலில் நடந்த தொழுகையில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நான்கு இடங்களில் திடலில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சிறப்புத் தொழுகை
கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே தொழுகை திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
ரம்ஜான் உரை
அதை தொடர்ந்து அப்துன் நாசர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஜாதிப் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது என்றார்.
6000 பேர் பங்கேற்பு
இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார். இதில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
நோன்பு பெருநாள் தானம்
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் அரிசி தானமாக வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
தென்காசி கோட்டாச்சியர் வெங்கடேஷ் தலைமையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லெட்சுமணன் மேர்பார்வையில், தாசில்தார் சுதந்திரராஜ்,காவல் ஆய்வாளர் ஐய்யப்பன்,உதவி ஆய்வாளர் முத்து லெட்சுமி ஆகியோர் பாதுகாப்பு ஏர்பாடுகளை செய்துஇருந்தனர்.