ஜெ.வைச் சந்திக்கிறார் புதுச்சேரி ரங்கசாமி.. அதிரடி ஆக்ஷன்களுக்கு வாய்ப்பு?... திடீர் பரபரப்பு!
சென்னை: புதுச்சேரியில் ஆட்சியை இழந்துள்ள என். ஆர். காங்கிரஸ் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக விரைவில் முதல்வர் ஜெயலலிதாவை, என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவைச் சேர்ந்த புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. கோகுலகிருஷ்ணன் மூலமாக ஜெயலலிதாவைச் சந்திக்க முயன்று வருகிறாராம் ரங்கசாமி. ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் பச்சைக் கொடி காட்டப்படும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
மீண்டும் அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்த ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸை விட்டு விலகி என்.ஆர். காங்கிரஸை தோற்றுவித்தவர் ரங்கசாமி. கட்சி தொடங்கிய வேகத்தில் தேர்தலைச் சந்தித்த அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியையும் கைப்பற்றினார். ஆனால் ஆட்சியில் அதிமுகவுக்குப் பங்கு கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக கூட்டணியை விட்டு விலகியது. மேலும் ரங்கசாமியை துரோகி என்றும் முதல்வர் ஜெயலலிதா வர்ணித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் கோகுலகிருஷ்ணன். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவரை அப்படியே ஹைஜாக் செய்து விட்டது அதிமுக. வேறு வழியில்லாமல் கோகுலகிருஷ்ணனை ரங்கசாமியும் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்காமல் தனியாகவேப் போட்டியிட்டது என்.ஆர். காங்கிரஸ். இதில் அக்கட்சிக்கு 8 இடங்களும், அதிமுகவுக்கு 4 இடங்களும் கிடைத்தன. ஆட்சியை இழந்தார் ரங்கசாமி. மறுபக்கம் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 2 இடங்களிலும் வென்று ஆட்சியைப் பிடித்தன.
தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டது தப்பாகப் போய் விட்டதே என்று ரங்கசாமி உள்ளிட்ட கட்சியினர் கருதுகிறார்களாம். மீண்டும் அதிமுகவுடன் இணைய வேண்டும் என்றும் கட்சித் தலைவர்கள் கூறி வருகிறார்களாம். மேலும் தற்போது நமச்சிவாயத்தை காங்கிரஸ் மேலிடம் ஏமாற்றி விட்டது. மேலும் நாராயணசாமி முதல்வராகியிருப்பதால் பல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியுடன் உள்ளனர். எனவே இதைப் பயன்படுத்தி குட்டையைக் குழப்ப வேண்டும் என்றும் என்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் ரங்கசாமியை வலியுறுத்தி வருகிறார்களாம்.
இதையடுத்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார் ரங்கசாமி. கோகுலகிருஷ்ணன் மூலமாக கடிதம் கொடுத்தும் அனுப்பியுள்ளாராம். விரைவில் ஜெயலலிதா அழைப்பு விடுப்பார் என்றும் நம்பிக்கையில் உள்ளார்.
ஒருவேளை அதிமுகவுடன் ரங்கசாமி மீண்டும் இணைந்தால், இருக்கும் 12 எம்.எல்.ஏக்களுடன், மேலும் சில காங்கிரஸ் அதிருப்தியாளர்களை இழுத்து நாராயணசாமி அரசைக் கவிழ்க்க அவர் முயல்வாரா என்ற பரபரப்பும் எழுந்துள்ளது. புதுச்சேரியில் இதுபோன்ற கவிழ்ப்புகளும், இழுப்புகளும் சகஜம் என்பதால் நடந்தாலும் நடக்கலாம் என்ற பரபரப்பு கூடியுள்ளது.