''வணக்கம்.. வணக்கம்''.. திருச்சூரில் கை குலுக்கிக் கொண்ட புதுவை ரங்கசாமி - நாராயணசாமி!
புதுச்சேரி: எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும், மத்திய அமைச்சர் நாராயணசாமியும் இன்று சந்தித்துக் கொண்டனர். கை குலுக்கியபடி பேசிக் கொண்டனர்.
இது காண்போர் கண்களைக் கவரும்படியாக அமைந்தது. முன்னாள் புதுச்சேரி அமைச்சர் வல்சராஜின் மகள் திருமணம் கேரளாவின் திருச்சூரில் நடந்தது. இதில் புதுச்சேரி அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், முன்னாள் கவர்னர் இக்பால்சிங், மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.
அதேபோல புதுவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இரு போட்டிக் கட்சியினரும் கலந்து கொண்ட போதிலும் யாரும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளவில்லை. மாறாக சிரித்தபடியும், கைகுலுக்கிக் கொண்டும் நட்பைப் பரி்மாறிக் கொண்டனர்.
அதேபோல முதல்வர் ரங்கசாமியும், நாராணயசாமியும் கூட வணக்கம் வணக்கம் என்று கூறிக் கொண்டு கைகளைக் குலுக்கி புன்னகைத்துக் கொண்டனர்.
அதேபோல நாராயணசாமியும், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான ராதாகிருஷ்ணனும் புன்னகைத்தபடி கை குலுக்கிக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு காட்சி வராதாப்பா...