அழுக்கு சாமியாரிடம் ஆசி பெற்ற ரங்கசாமி... புதுவையில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா?
சென்னை: யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இன்னமும் தெளிவான முடிவு எடுக்காத என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டகாரன்புதூர் அழுக்குசாமியார் கோயில் சித்தர் ஜீவசமாதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு நடத்தியுள்ளார்.
கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முன்பாக அழுக்குசாமியார் கோயில் சித்தர் ஜீவசமாதியில் ரங்கசாமி வழிபாடு நடத்துவார் என்று என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் போலவே புதுச்சேரி மாநிலத்திற்கும் மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ளது போலவே புதுச்சேரியிலும் திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கட்சி ஆரம்பித்து மூன்றே மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, யாருடன் கூட்டணி என்பதில் தடுமாறிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கழற்றி விட்ட ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி, 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணிவைத்து பின்னர் அதைக் கழட்டிவிட்டு சுயேட்சையின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார்.
கூட்டணிக்கு குழப்பம்
ராஜ்ய சபா தேர்தலில் எம்.பி பதவி கேட்டது பாஜக ஆனால், ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவிற்கு எம்.பி பதவியைத் தாரைவார்த்தார். எனவே இம்முறை யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார் ரங்கசாமி.
பலமான கூட்டணி
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவித்த பின்னரும் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இதுவரை எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை. எனவே என்.ஆர். காங்கிரசும் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என்று அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்கள்.
அதிமுக உடன் கூட்டணி
கடந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரசும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இடையில் இந்த கட்சிகள் மத்தியில் விரிசல் ஏற்பட்டாலும், ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் அதிமுகவிற்கு என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதன்மூலம் அதிமுகவிற்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கிடைத்தது.
சரியான விரிசல்
இதனால் இருகட்சிகளுக்கும் இடையே இருந்த விரிசல் சரியானது. எனவே இந்த சட்டசபை தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதற்கிடையே அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி இரு கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, உறுதியான தகவல்களை தெரிவிக்கவில்லை.
நிர்வாகிகள் வலியுறுத்தல்
இதற்கிடையே அதிமுக உடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமியிடம் இந்த கூட்டணி அமைய வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி இதுவரை ரங்கசாமி எந்த முடிவும் எடுக்கவில்லை.
தயக்கத்திற்குக் காரணம்
அதே நேரத்தில் சென்றமுறை நம்மிடம் 12 தொகுதிகள் வாங்கியவர்கள் அவர்கள். இந்த முறை நாமே கூட்டணிக்காக வலியச் சென்றால் 15 தொகுதிகள் கேட்பதோடு ஆட்சியிலும் கண்டிப்பாகப் பங்கு கேட்பார்கள் என்று தயக்கம் காட்டுகிறார் ரங்கசாமி.
ஜெயலலிதா முடிவு
என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரும்புவது போலவே அதிமுக எம்.எல்.ஏ.க்களில் சிலரும் கூட என்.ஆர். காங்கிரசுடன் கூட்டணி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை தமிழக முதல்வரும், பொதுச்செயலாளருமான ஜெயலலிதாதான் முடிவு எடுப்பார். அதனால் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை.
பாஜக உடன் பேச்சுவார்த்தை
அதே நேரத்தில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக உடன் கூட்டணியை தொடர்வதில் விருப்பமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பாஜகவிற்கு ஒரு சில தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அழுக்குசாமியார் ஆசி
இந்த நிலையில் முதல்வரும் என்.ஆர் காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டகாரன்புதூர் அழுக்குசாமியார் கோயில் சித்தர் ஜீவசமாதியில் சில தினங்களுக்கு முன்னர் வழிபாடு நடத்தினார்.
ரங்கசாமி முடிவு
செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளோம். அதனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதுதான் எனது எண்ணமும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையும் ஆகும். இந்த சட்டசபைத் தேர்தலில், கூட்டணி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
தேசிய கட்சியுடன் பேச்சு
தேர்தல் நிலவரம் குறித்து என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, மீண்டும் போட்டியிட சீட்டு கிடைக்காது என்பதால் சிலர் கட்சியிலிருந்து விலகி சென்றுள்ளனர்.‘தேசிய கட்சியும் இந்த முறை எங்களுடன் கூட்டணியில் இணைவது குறித்து பேசி வருகிறது.
முக்கிய முடிவு
முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர், வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்குசாமியார் கோயிலுக்கு வந்து, சித்தர் ஜீவசமாதியில் முதல்வர் வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், கோயிலில் வழிபாடு நடத்தி, சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார் ரங்கசாமி' என்று தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் ஆலோசனை
இது ஒரு பக்கம் இருக்க, புதுச்சேரியில் பிரதானக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து தி.மு.கவுடன் தீவிரமாக ஆலோசனை செய்துகொண்டிருக்கிறது.
ஆட்சியை பிடிக்க ஆயத்தம்
கடந்த தேர்தலில் பறிகொடுத்த ஆட்சியை எப்படியாவது, இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கிறது காங்கிரஸ். ஆளும் கட்சி மீது இருக்கும் அதிருப்தியைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வியூகம் அமைத்து வருகின்றனர்.
அதிமுகவும் மும்முரம்
அதேபோல, அதிமுகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ராஜ்யசபா எம்.பியுமான கண்ணனை இழுத்துப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தனித்து போட்டியிட முடிவு
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் ரங்கசாமி. அதைக்கூட மறந்து, கவிழ இருந்த ஆட்சியைக் காப்பாற்றியவர் அம்மா. இவருடன் நாங்கள் ஏன் கூட்டணிவைக்க வேண்டும்? தனித்தே நிற்க நாங்கள் தயாராகிவிட்டோம் என்றும் அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
ஒரே குழப்பம்தான்
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் அரசியல் களம் பரபரப்பாக இருந்தாலும் யாருடன் யார் கூட்டணி என்பதில் குழப்பம் நீடிக்கவே செய்கிறது.
ரங்கசாமி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அல்லது காங்கிரஸ் - திமுக கூட்டணி வெல்லுமா? தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள அதிமுக ஆட்சியைப் பிடித்து புதுவையில் புதுக்கணக்கு தொடங்குமா? மே 19ல் தெரியவரும்.