தேர்தல் தோல்வி... புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி: தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே கடந்த திங்களன்று புதுவையின் 30 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, திமுக - காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது தவிர அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
அதிக இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதுச்சேரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. எனவே, தனது தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
துணை நிலை ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் ரங்கசாமி.
விரைவில் புதுச்சேரியில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.