நாங்க கொடுத்த மிக்சி, கிரைண்டர் தரமானது... ஜெ.வை போட்டு தாக்கும் புதுவை ரங்கசாமி
புதுச்சேரி: நாங்கள் கொடுத்தது எல்லாம் தரமான மிக்சி, கிரைண்டர். மகளுக்கு சீதனமாக கூட கொடுத்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் கொடுத்த இலவச பொருட்கள் எல்லாம் கயலான் கடையில் இருக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர், தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்.
வேட்புமனு தாக்கல் முடியும் நாள்வரை வேட்பாளர்களை அறிவிக்காமல் கடைசிநாளில் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த ரங்கசாமி தற்போது பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். ஏசியில்லை.... பந்தா இல்லை... சொகுசு வாகனம் எதுமில்லை... வெயிலில் வேட்பாளருடன் நின்று மைக் பிடித்து பேசிக்கொண்டே வாக்க சேகரிக்கிறார் முதல்வர் ரங்கசாமி
ஜெயலலிதா தடுக்கிறார்
ரங்கசாமி அதிகம் கவுண்டர் கொடுப்பது அதிமுகவிற்கு எதிராகத்தான். புதுச்சேரியில் இருந்து 2 மதுபாட்டில்களை கொண்டு போக விடமாட்டேங்கிறார். வருமானத்தை தடுக்கும் ஜெயலலிதா எப்படி மாநிலத்தை முன்னேற்றுவார் என்று கேட்கிறார் ரங்கசாமி.
ஏழை மக்களுக்கு உதவி
காரைக்காலுக்கு வந்த ரங்கசாமி, நெடுங்காடு தொகுதிக்கு உள்பட்ட பூவம் பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தில் அந்தக் கட்சி வேட்பாளர்களை பேசினார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது. ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது என்றார்.
மாணவர்களுக்கு மடிக்கணினி
உயர்கல்வி படிக்க சென்டாக் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு முழுமையாக கல்வி உதவித் தொகையை அரசு அளித்துள்ளது. கல்வி உதவித் தொகை மூலம் படித்து 8 ஆயிரம் மருத்துவர்கள், 35 ஆயிரம் பொறியாளர்கள் புதுச்சேரியில் உருவாகியுள்ளனர். 12,400 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் தரப்பட்டுள்ளன.
இலவச பொருட்கள்
மக்களுக்கு இலவச அரிசி தடையின்றி வழங்கப்பட்டுள்ளது. 3.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டன. மழை, வெள்ள பாதிப்பையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 4 ஆயிரம் உதவித் தொகை தரப்பட்டுள்ளது.
ரூ. 3000 உதவித்தொகை
எந்த மாநிலத்திலும் வழங்கப்படாத வகையில் முதியோர் உதவித் தொகை ரூ. 3 ஆயிரம் வரை உயர்த்தி தரப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறு திட்டத்தின் நிதி முறையாக வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டது.
தொழிற்பேட்டை
திருமலைராயன்பட்டினத்தில் தொழிற்பேட்டை உருவாகவுள்ளது. ஜிப்மர் நிர்வாகம் காரைக்காலில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய சிறப்பு மருத்துவமனை அமைக்க, 76 ஏக்கர் நிலத்தை புதுச்சேரி அரசு ஒப்படைத்துவிட்டது. வரும் ஜூலை மாதம் முதல் 50 மாணவர்கள் சேர்க்கையுடன் மருத்துவக் கல்லூரி காரைக்காலில் தொடங்கவுள்ளது.
திருநள்ளாறு கோவில்
ரூ. 100 கோடியில் திருநள்ளாறு கோயில் நகரத் திட்டப்பணி நடைபெறுகிறது. ரூ. 336 கோடியில் காரைக்காலில் புதைச்சாக்கடைத் திட்டம் அமைவதற்கு பிரெஞ்சு நிறுவனத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொய் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் நிதி நெருக்கடி இருப்பதாக எதிர்கட்சிகள் பொய்க்குற்றச்சாட்டை கூறி வருகின்றன. புதுச்சேரி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. மாணவர் நலனில் அக்கறை கொண்டுள்ள எனது அரசு உயர்படிப்பு வரை இலவச கல்வி வழங்கி வருகிறது என்று கூறினார்.
நன்றிக்கடன்
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதற்கு நன்றி கடனாக மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பை விட்டுக் கொடுத்துவிட்டோம்.
உங்களை நம்பி நிற்கிறேன்
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்களை நம்பித்தான் 30 தொகுதியிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எனவே 30 தொகுதியிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆளுங்கட்சி மீண்டும் தக்கவைக்குமா?
ஆளுங்கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமமானது என்று பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. அதற்கு அப்போது பதில் சொல்லாத ரங்கசாமி, பிரச்சாரத்தில் சூடாக பதிலடி கொடுத்து வருகிறார். ஆட்சியை தக்கவைப்பாரா ரங்கசாமி.