வடிவேலு காமெடியை நிஜமாக்கிய மக்கள்... 48 கிணறுகளைக் காணவில்லை எனப் புகார்!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 48 கிணறுகளைக் காணவில்லை என அப்பகுதி மக்கள் வாலாஜா தாசில்தாரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜா தாசில்தார் மணிலாவிடம், ரத்தினம் என்பவரும் அப்பகுதி பொதுமக்களும் சேர்ந்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அம்மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் வாலாஜா நகரசபை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களின் குடிநீர் ஆதாரமாக வாலாஜாவை அடுத்த வன்னிவேடு பாலாற்று பகுதியில் சர்வே எண் 835 மற்றும் அந்த பகுதியில் உள்ள சர்வே எண்களில் அடங்கிய 48 குடிநீர் கிணறுகளில் இருந்து தினமும் குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாலாற்று பகுதி வன்னிவேடு கிராம சர்வே எண் 835 மற்றும் இந்த எண்ணை சார்ந்துள்ள சர்வே எண்களில் குடிநீர் கிணறுகள், காடுகள் ஏதும் இல்லை என மாவட்ட கலெக்டர் நந்தகோபால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, குடிநீர் வடிகால் வாரிய மாவட்ட அதிகாரி நாராயணசாமி, வாலாஜா தாசில்தார் மற்றும் அதிகாரிகள், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில் அந்த இடங்களில் அரசு மணல் குவாரி அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக வன்னிவேடு கிராம பாலாற்று பகுதியிலிருந்து வாலாஜா மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் கிணறுகள் காணாமல் போய் உள்ளன. எனவே கிணறுகளை கண்டுபிடித்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனுவின் நகல்கள் வாலாஜா நகரசபை தலைவர், நகரசபை ஆணையாளர், வாலாஜா போலீசார் ஆகியோருக்கும் தரப்பட்டுள்ளது.