அரிய வகை ஆமை பதுக்கல்… பாதுகாப்பு குழும போலீசார் அதிரடி பறிமுதல்
தூத்துக்குடியில் அரிய வகை ஆமை வகைகள் பதுக்கப்பட்டிருந்தது. அதனை பாதுகாப்பு குழும போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி: உணவுக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிய வகை ஆமையை பாதுகாப்பு குழு போலீசார் பறிமுதல் செய்து கடலில் விட்டனர். இந்த சம்பவம் துத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பாத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு பின்பகுதியில் சிலர் கடல் ஆமைகளை பிடித்து பதுக்கி வைத்திருப்பதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தூத்துக்குடி கடலோர குழும பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு முள்வேலியின் உள்ளே இரண்டு கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆமைகளை வனத்துறையினரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் மீட்டு கடற்கரை பகுதிக்கு சென்று பாதுகாப்பாக கடலில் விட்டனர்.
இந்த ஆமைகள் ஆலிவ் எனப்படும் அரிய வகையை சேர்ந்த ஆமைகள் ஆகும். இதில் ஒரு ஆமை சுமார் 10 கிலோ எடையும், மற்றொரு ஆமை 15 கிலோ எடையும் இருந்தது. இந்த ஆமைகளை கடலில் இருந்து பிடித்து உணவுக்காக மர்ம நபர்கள் பதுக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.