அன்றாட போக்குவரத்துக்கே அல்லாடும் மக்கள்... சொகுசுப் பேருந்துகளில் வந்து இறங்கிய எம்எல்ஏக்கள்!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில், எம்எல்ஏ விடுதியில் இருந்து சட்டசபைக்கு சொகுசு பேருந்துகளில் எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்தத்தால் மக்கள் அன்றாட போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 6வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நீடிப்பதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
முதல் 2 நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், பணிச்சுமை காரணமாக அவர்களும் பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அவதியில் மக்கள்
இதே போன்று அலுவலகம் செல்லும் பொதுமக்களும் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட அதிக பணம் செலவு செய்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்டவற்றில் கூட்ட நெரிசலுடன் மக்கள் பயணித்து வருகின்றனர்.
முதல் நாள் கூட்டம்
சட்டசபையின் நேற்றைய கூட்டத்திலேயே போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையை புறக்கணித்தன.
அல்லல்படும் பொதுமக்கள்
தமிழகம் முழுவதும் மக்கள் அன்றாட போக்குவரத்துக்கே அல்லப்பட்டு வரும் நிலையில் சட்டசபைக்கு வரும் எம்எல்ஏக்களுக்கு மட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மற்ற மாவட்ட எம்எல்ஏக்கள் சேப்பாகம் எம்எல்ஏ விடுதியில் தங்கியுள்ளனர்.
எம்எல்ஏக்களும் மட்டும் சொகுசு பேருந்து
இவர்கள் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வருவதற்காக 2 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் வந்து செல்லும் ஓட்டை உடைசல் பேருந்து அல்ல இவை, புத்தம் புதிதான சொகுசு பேருந்தில், அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர் இந்த பேருந்தை ஓட்டி வந்து எம்எல்ஏக்களை தலைமைச் செயலகத்தில் இறக்கிவிட்டு சென்றனர்.