கேரளாவுக்கு கடத்த முயன்ற 80 மூட்டை ரேஷன் அரிசி.. தடுத்து பறிமுதல் செய்த அதிகாரிகள்
விருதுநகரில் இருந்து கேரளாவுக்கு கடத்தவிருந்த 80 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர்: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற போது அதிகாரிகள் அதிரடியாக களம் இறங்கி ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து உணவுப் பொருள் கடத்தல் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
ராஜபாளையம் அருகே முறப்ப சோதனை சாவடியில் பணியில் இருந்தனர். அப்போது அங்கு 2 மினி வேன்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனை கேரளாவுக்கு கொண்டு செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2 வேன்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் இருந்த 80 மூட்டை ரேஷன் அரிசியையும் கைப்பற்றினர். வேனில் வந்த கேரள மாநிலம் புனல்வேலியை சேர்ந்த வேலு, ராஜபாளையம் ஆர்.ஆர்.நகர் கனகராஜ், தென்மலை காசிராஜன், கிருஷ்ணாபுரம் துரைப்பாண்டி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் ராஜபாளையம் சம்சிகாபுரத்தை சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர் கண்ன்ண என்பவரிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள் வேலு உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் கடை விற்பனையாளர் கண்ணன், வேன் உரிமையாளர் சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.