1000 டன் ரேசன் பொருட்கள் வெள்ளத்தில் நாசம் - ஒன்றுமில்லாமல் போன ஏழைகளின் ஒரு வேளை சோறு!
சென்னை: தமிழகத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளும், மால்களும் பல்கிப் பெருகி ஹைடெக் ஸ்டைலில் அரிசி, பருப்பினை விற்றாலும் அடித்தட்டு மக்களுக்கும், பெரும்பாலான மிடில்கிளாஸ் மக்களும் மாதாமாதம் கைகளில் பைகளை தூக்கிக் கொண்டு அரிசிக்கும், சர்க்கரைக்கும் வரிசையில் நிற்பது ரேசன் கடைகளில்தான்.
அரசால் நியாய விலைக்கடை எனக் கூறப்படும் இந்த ரேசன் கடைகளில் பெரும்பாலும் காதில் ஒலிக்கும் பதில் "இன்னைக்கு அரிசி இல்லைமா ரெண்டு நாள் கழிச்சு வாங்க" என்பதுதான். ஆனாலும், ஏழைகளில் வீட்டில் உலை கொதிக்க ரேசன் அரிசிதான் காரணம்.
இரண்டு அரசுகளுமே 1 ரூபாய் அரிசி, இலவச அரிசி எல்லாம் வாரி வழங்கினார்கள்தான். ஆனால், அரசு என்பது அந்தந்த நேரத்து தனிமனிதர்கள்தான் என்பது போல ரேசன் கடை ஊழியர்கள் மனது வைத்தால் மட்டுமே பை நிரம்பும் நிலை.
வயிற்றில் அடித்தது வெள்ளமா?:
இந்நிலையில்தான் சென்னை வெள்ளம் கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச அரிசி, பருப்பிற்கும் ஆப்பு வைத்து சென்று விட்டது. சேர்த்து வைத்து, சேர்த்து ரேசன் கடைக்காரர்கள் பாதுகாத்த உணவுப் பொருட்கள் எல்லாம் இன்று அரை வயிறு கஞ்சி குடிக்கும் ஏழை மக்களின் வயிற்றில் அடித்துவிட்டது.
வெளியில் கொட்டும் அவலம்:
அடித்துப் போன வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான டன் ரேசன் பொருட்கள் நாசமாகி, கடைக்காரர்கள் புழுத்துப் போன அவற்றை வெளியில் கொட்டி வருகின்றனர்.
விற்பனை அமோகம்:
ஒருபுறம் அரசிற்கே தெரியாமல் கள்ளச் சந்தையில் ரேசன் பொருட்கள் விற்பனை அமோகம் என்றால் மிஞ்சிப் போய் மக்களுக்கு கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களும் இந்த வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது கொடுமையிலும் கொடுமை.
சோறு போடும் ரேசன் கடைகள்:
வெள்ள நிவாரணமாய் 5000, 10000 கோடி வந்தாலும் வழங்கப்படும் ரூ.5000 நிவாரணம் வாடகைக்கே பத்தாது என்ற நிலையில் மேல்தட்டு மக்களும் ரேசன் கடையை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நியாய விலைக்கடைகளா?:
இந்நிலையில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒவ்வொரு டன் அரிசி, பருப்பும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை பட்டினி நிறைந்ததாக மாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இனியேனும் திருந்தி பதுக்கி, பதுக்கி வைக்காமல் பகிர்ந்து கொடுத்தால் மட்டுமே ரேசன் கடைகள் உண்மையான நியாய விலைக்கடைகளாய் இருக்கும்.