"என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ஜெயேந்திரர் தான் பொறுப்பு"!! கதறும் ரவிசுப்பிரமணியம்!!!
சென்னை : தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு காஞ்சி ஜெயேந்திரர் தான் பொறுப்பு என்று சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ்சாட்சியான ரவிசுப்பிரமணியம் முதலமைச்சர் தனிப் பிரிவில் மனு அளித்துள்ளார்.
இதனால் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது. இது குறித்து ரவி சுப்ரமணியம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது...
காஞ்சி வரதராஜபொருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு மற்றும் ராதாகிருஷ்ணன் (ஆடிட்டர்) தாக்கப்பட்ட வழக்கு இரண்டிலும் கைது செய்யப்பட்டு இரு வழக்குகளிலும் அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளித்ததன்படி ஜெயேந்திரர் மற்றும் தொடர்புடைய அனைவருக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதுடன் தண்டனைக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.
இது தொடர்பாக தாதா அப்பு மற்றும் கதிரவன் மூலம் என்னை மிரட்டி பிறழ்சாட்சியாக மேற்கண்ட இருவழக்குகளிலும் மாறிடச் செய்தனர். தற்போது அப்பு, கதிரவன் என்ற இருவரும் இறந்துவிட்டதால் நான் சற்று சுதந்திரமாக இருக்க முடிகிறது.
இருப்பினும் பிறழ்சாட்சி சொல்லி உண்மை குற்றவாளிகளை தப்பிக்கவிட்ட செயல் என் மனசாட்சி ஏற்றுக் கொள்ளாமல் என்னை இரவும் பகலும் உறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அரசு வழக்கறிஞரை சந்தித்து நடந்த உண்மைகளை கூறுவதாக தெரிவித்து அது தொடர்பான ஆலோசனைகளை கேட்டேன்.
இதைத் தெரிந்தகொண்ட ஜெயேந்திரர் மற்றும் அவரது ஆட்கள் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லப் போகிறாயா, உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என்றும் சங்கரராமனுக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும்
என்றும் மிரட்டினார்கள்.
இந்த நிலையில் எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஜெயேந்திரர், ராமச்சந்திரன், போலீஸ் கண்ணன், சுந்தரேச அய்யர் ஆகியோர் தான் முக்கிய காரணம்.
எனவே ஜெயேந்திரர், சுந்ரேசய்யர் ஆகியவர்களின் பிணையை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் தனிப்பிரிவில் சுப்பிரமணியம் (என்ற) ரவிசுப்பிரமணியம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.