பரோலை ஒரு மாதம் நீட்டியுங்கள்.. தமிழக அரசுக்கு ரவிச்சந்திரன் கோரிக்கை
பரோலை ஒரு மாதம் நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: பரோலை ஒரு மாதம் நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் கடந்த 5ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் பரோலை நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கடந்த 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் நான், விடுதலைக்குப் பிறகான எனது எதிர்காலத்தை உறுதி செய்யும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையின் உத்தரவின்படி 15 நாள்கள் சாதாரண விடுமுறையில் அருப்புக்கோட்டைக்கு வந்துள்ளேன்.
சென்ற 10 நாள்களாக, ஆண்டுக்கணக்கில் நீடித்து வந்த குடும்பச் சொத்துகள், பாகப்பிரிவினை தொடர்பான நடைமுறைப் பிரச்னைகள், சட்டச்சிக்கல்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்களுடனான தொடர் கலந்துரையாடலில் சரிசெய்யப்பட்டு வருகின்றன. என் தாயார், (வயது 64) குடும்ப ஓய்வூதியம் பெறும் ஒரு மூத்த குடிமகள் மட்டுமே. எனவே எம் வீட்டில் மராமத்துப் பணி மற்றும் தோட்டத்தில் பயிர்ச்சாகுபடி, மேலாண்மை தொடர்பான பணிகளைச் செய்ய நிதி ஆதாரம் மற்றும் பணியாளர்களை அமர்த்த கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.
ஆகவே, என் வயதான தாயாரினாலும் தற்போதை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஒருமாதம் பரோல் நீட்டிப்பு வழங்க உரிய ஆணை பிறப்பிக்குமாறு பணிவுடன் தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்" இவ்வாறு ரவிச்சந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.