அணிகளை இணைக்க இன்னும் முகூர்த்த நாள் குறிக்கவில்லை - ஆர்.பி உதயகுமார்
ஓபிஎஸ் அணியுடனான பேச்சுவார்த்தை சாதகமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இணைப்பிற்கான முகூர்த்த நாள் இன்னும் குறிக்கவில்லை என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முகூர்த்த தேதி இன்னும் குறிக்கவில்லை என்று தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை ரகசியமாகவே நடந்து வருகிறது.
அணிகள் இணைப்பு
இந்த சூழ்நிலையில்தான் டிடிவி தினகரன் மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அணிகளை இணைக்க அவசரமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய அறிவிப்பு
இதனிடையே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிடுகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணியுடன் இணைப்பு பேச்சுவாரத்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.
Recommended Video
முகூர்த்த தேதி
அணிகள் இணைப்பதற்கான முகூர்த்த தேதி இன்னமும் குறிக்கவில்லை. தேதி குறித்த உடன் அது பற்றி அனைவருக்கும் தெரிவிக்கப்படும். அணிகள் விரைவில் இணையும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
குழம்பிய குட்டையில் மீன்
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்து வருகிறார் என்று கூறியுள்ள உதயகுமார், ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களில் நடிகர் கமலும் ஒருவர் என்று தெரிவித்தார்.