என்னுடையது உழைத்துச் சேர்த்த சொத்துக்கள்... ஈவிகேஎஸ்-ன் சவாலை ஏற்பதாக தங்கபாலு அறிவிப்பு
சென்னை: தனது சொத்துக்கள் அனைத்தும் உழைப்பால் சேர்ந்தவை, அது தொடர்பாக இளங்கோவனுடன் நேரடியான விவாதத்திற்கு தயார் என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. தற்போதைய தலைவர் இளங்கோவனை எதிர்த்து, முன்னாள் தலைவர் தங்கபாலு, சிதம்பரம் உள்ளிட்ட தலைவர் கட்சித் தலைமையிடம் நேரில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக இளங்கோவன் கூறுகையில், ‘என் நேர்மையை விமர்சிக்கும் தங்கபாலுவுக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்பது குறித்து என்னிடம் ஆதாரங்கள் உள்ளது. இது தொடர்பான விவாதத்திற்கு அவர் தயாரா? என பகிரங்க சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் தங்கபாலு. அப்போது அவர் கூறியதாவது:-
ஆழ்ந்த கவலை...
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட காரணத்தினால் ப.சிதம்பரம், குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி உள்பட நாங்கள் தமிழக காங்கிரசின் தற்போதைய நிலவரம் பற்றிய எங்களது ஆழ்ந்த கவலைகளை சோனியா காந்தியிடமும், ராகுல்காந்தியிடமும் தெரிவித்தோம்.
எங்கள் கருத்துக்கள்...
தமிழ்நாட்டில் கட்சி எப்படி இருக்கிறது, சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், என்னென்ன முறைகளை கையாண்டால் கட்சி பலம் பெறும் என்ற நல்ல நோக்கத்தோடு எங்கள் கருத்துக்களை எடுத்துச் சொன்னோம்.
வேறு பாதையில் கட்சி...
கடந்த 8 மாத காலமாக தமிழக காங்கிரசில் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சூழ்நிலை இல்லை. இருந்தாலும் கட்சி நலன் கருதி முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தோம். ராகுல்காந்தி திருச்சி பயணத்திலும் ஒத்துழைத்தோம். இது அகில இந்திய தலைமைக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கட்சி வேறு பாதையில் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்காமல் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் உடனடியாக நடவடிக்கை தேவை என்ற எங்கள் கருத்தை தெரிவித்தோம்.
சோனியாவை விமர்சித்த கோவன்....
சோனியாவையும், ராகுலையும் மிகக்கடுமையாக விமர்சித்த கோவனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் எதிர்ப்போம். நாங்களும் கருத்து சுதந்திரம் வேண்டும் என்று தான் சொல்கிறோம். அதே நேரத்தில் ராகுலை கொலை செய்ய வேண்டும், காங்கிரசுக்கு பாடை கட்ட வேண்டும் என்ற கோவனை ஆதரிப்பதா? தொண்டர்களின் ரத்தம் கொதிக்கிறது. தன்மானம் உள்ள யாரும் இதை ஏற்க மாட்டார்கள். இதை விட பச்சை துரோகம் எதுவும் கிடையாது. இதை விட ஒழுக்க கேடான தலைமை இருக்கவும் முடியாது.
கட்சிக்கு களங்கம்...
இன்னும் பல விஷயங்களில் கருத்துமாறுபாடு இருக்கிறது. ஆனால் இன்று காலையில் மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் என்னை தொடர்பு கொண்டு பேசினார். எனவே கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நான் எதுவும் சொல்ல மாட்டேன். இளங்கோவன் தலைவனாக இருக்கும் போது அவரைப் பற்றி சொன்னால் அது கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதாக அமையும்.
கட்சியின் கவுரவத்தை குலைக்கும் வகையில் நான் ஒரு போதும் செயல்பட மாட்டேன். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சித்தது கிடையாது. என்னைப் பற்றி அவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து இருக்கிறார். அவரது சவாலை நான் ஏற்கிறேன்.
சொத்து விபரம்...
தவறான முறையில் நான் சொத்து சேர்த்து இருப்பதாக கூறியதை கண்டிக்கிறேன். நான் வைத்து இருப்பது 50 ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த சொத்து. அதற்கு முறையான கணக்கு என்னிடம் இருக்கிறது. நிலத்தை அபகரித்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். அதற்கான அவசியம் எனக்கு இல்லை. 1952-ல் சேலத்தில் 20 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக கொடுத்த குடும்பம் எங்கள் குடும்பம். அதற்கான பட்டாவும் என்னிடம் இருக்கிறது.
சட்டப்படி சேர்த்தது...
நான் உழைத்து சேர்த்த பணத்தில் உருவாக்கியது 2 கல்லூரிகள். அந்த கல்லூரிகளில் பல ஏழை குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கிறோம். அந்த கட்டணத்தை தவிர நன்கொடை எதுவும் வசூலிப்பது இல்லை. கல்லூரிக்கு மதில் சுவர் கட்டி இருக்கிறோம். அதுவும் அரசு வரையறுத்து கொடுத்த எல்லையில்தான் கட்டி இருக்கிறோம். ஒரு அங்குலம் நிலம் கூட புறம் போக்கு கிடையாது. அவ்வாறு அபகரித்து இருந்தால் சட்டப்படி எடுத்துக் கொள்ளட்டும்.
ஒழுக்கமானவன்...
எனது தனி அடையாளம் ஒழுக்கமானவன் என்பது தான். குளிர்பானம் கூட குடிக்க மாட்டேன். நான் ரங்கராஜன் வீட்டில் கார் செட்டில் தங்கி இருந்ததை கொச்சைப்படுத்தி இருக்கிறார். நான் அதை தவறாக கருதவில்லை. நான் அவர்களது குடும்பத்தில் ஒருவன்தான்.
எனது டிவி...
நான் டி.வி. தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். 2007-ல் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் சோனியாகாந்திதான் தொடங்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை கட்சி வளர்ச்சிக்காகத்தான் டி.வி.யை பயன்படுத்தி வருகிறேன். காங்கிரசின் கை சின்னத்தை முதன் முதலில் டி.வி.யில் காண்பித்ததே நாங்கள்தான். எனவே இளங்கோவன் இதையெல்லாம் தவறாக பேசுவதை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த உள்கட்சி தலைவர்களை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
கட்சிக்கு என்ன பலன்...
ஒரு காலத்தில் காங்கிரசை பலப்படுத்த பாடுபட்டவர் மூப்பனார். வாசனும் எனக்கு நண்பர்தான். அவர் கட்சியை விட்டு பிரிந்து சென்றபோது அவரை இளங்கோவன் செத்துப் போனவர் என்று மோசமாக குறிப்பிட்டார். அதனால் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இதனால் கட்சிக்கு என்ன பலன்.
நிதானம் தேவை...
முதலமைச்சர் ஜெயலலிதா - பிரதமர் மோடி சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசினார். இதனால் அவரால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு எதிராக கொடும்பாவி எரிப்பு போராட்டங்கள் நடந்ததும் பின் வாங்கினார். எனவே கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். நான் இளங்கோவனைப் போல் வெளியே சென்று வந்தவன் அல்ல. 45 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருக்கிறேன்.
பதவி ஆசையில்லை...
அரசியல் பண்பாடு, நாகரீகம் என்பதெல்லாம் எனக்கு தெரியும். கட்சி தலைமை கேட்டுக் கொண்டதால் இதோடு விடுகிறேன். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படும் நிலை வர வேண்டும். கூட்டணியைப் பொறுத்தவரை தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். தனித்து போட்டியா? கூட்டணியா? என்பதையெல்லாம் பலரோடு கலந்து பேசி கட்சி தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் எல்லாம் அப்படித்தான் செய்து இருக்கிறோம். நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. பதவியும் கேட்கவில்லை.
தவறு...
டெல்லியில் சோனியா எங்களிடம் கடிந்து கொண்டதாக கூறுவது தவறு. நாங்கள் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினோம். இளங்கோவனுடன் யாரும் ஒத்துழைக்கவில்லை என்று கூறுவது தவறு' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.