இன்றே ஜல்லிக்கட்டை நடத்துவோம்.. அரசு தீவிரம்.. மக்கள் எதிர்ப்பு! அலங்காநல்லூரில் உச்சகட்ட பரபரப்பு
மதுரை அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இன்றே தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அலங்காநல்லூரில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இருப்பினும் அலங்காநல்லூர் மக்கள் அமைதி வழியில் இன்னும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தடை காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இருப்பினும் இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கொதித்தெழுந்த இளைஞர் பட்டாளம் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து மிகப்பெரிய தொடர் போராட்டங்களை நடத்தினர்.
அவசர சட்டம்
மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து போராடத் துவங்கின. போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று பிறப்பித்தார்.
ஓபிஎஸ் விளக்கம்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டம் நிரந்தரமான சட்டம். இதற்கு ஆறுமாதம் அவகாசம் இருந்தாலும், வருகின்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும். இந்தச்சட்டத்துக்கு பொதுமக்கள், இளைஞர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன். இதற்காக அறவழியில் போராடியது, மக்களின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் போராடிய மக்களுக்கு நன்றி. நாளை வாடிவாசல் திறக்கும். காளைகள் துள்ளி குதித்து வரும் என்றார்.
அரசு தீவிரம்
அவசர சட்டம் பிறப்பிக்கபட்ட உடனே அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. உடனடியாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையையும் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டது. அங்காநல்லூரில் 350 காளைகள் பங்கேற்கும். எனவும் பார்வையாளர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்ப்பு
எங்களுக்கு அவசர சட்டம் தேவையில்லை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தரமாக சட்டத்தில் திருத்தம் தேவை என அலங்காநல்லூரில் போராடி வரும் மக்கள் அறிவித்துவிட்டனர். போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய நிர்வாகிகள், முதல்வரே வந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்காது என அறிவித்தனர். இதை வரவேற்று மக்கள் கோஷமிட்டனர். காளைகளை அவிழ்த்துவிட மாட்டோம் என்று மாடு வளர்ப்போர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் அலங்காநல்லூரில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு என்னவாகும் என்ற குழப்பம் நிலவுகிறது.
உச்சகட்ட பாதுகாப்பு
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடந்தே தீரும் என முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதற்காக வாகனங்களில் காளைகள் அலங்காநல்லூர் கொண்டு வரப்பட்டன. ஆனால் ஊர்மக்கள் எதிர்ப்பால் காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாடிவாசல் பகுதியில் மக்கள் அறவழியில் போராடி வருகின்றனர்.
மதுரை மாவட்ட எஸ்.பி தலைமையில் பாதுகாப்பு பணியில் 2,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், 15 சார் ஆட்சியர்கள் மற்றும் 10 வட்டாச்சியர்களும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஊர்மக்கள் எதிர்ப்பு, இன்றே ஜல்லிக்கட்டை நடத்தி தீருவோம் என அரசு ஒரு புரம் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் அலங்காநல்லூரில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.