மதம் மாற தயாரான துர்கேஸ்வரி… சேர்ந்து வாழ சம்மதம் சொன்ன ஆஷிக் மீரா
திருச்சி: காதலி துர்கேஸ்வரியை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தத் தயாராக இருப்பதாக சர்ச்சையில் சிக்கிய திருச்சி முன்னாள் துணைமேயர் ஆஷிக்மீரா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை அவர் 2 வாரம் மதுரையில் தங்கி, மதுரை காந்தி மியூசியத்தில் சேவையாற்ற உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் மரியம் பிச்சையின் மகனான ஆஷிக்மீரா திருச்சி மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக துர்கேஸ்வரி என்பவர் திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் ஆஷிக் மீரா புகார் தந்தார்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஆஷிக்மீரா, அவருடைய மாமியார் மைமூன் ஷரிபா, நண்பர்கள் சரவணன், சந்திரபாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மைமூன்ஷரிபா, சரவணன், சந்திரபாபு ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஷிக்மீரா, துர்கேஸ்வரி இருவரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். அப்போது ஆஷிக்மீரா தனது பிரமாண வாக்கு மூலத்தை தாக்கல் செய்தார். அதில், ‘‘எனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிந்தும், துர்கேஸ்வரி என்னை தீவிரமாக காதலித்தார். அவரது விருப்பப்படி துர்கேஸ்வரியின் தாயார், குடும்ப நண்பர்கள் முன்னிலையில் தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்தேன்.
அமைச்சராக இருந்த என் தந்தை மரியம் பிச்சை இறந்த பின்பு, நான் திருச்சி மாநகராட்சி துணை மேயராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தேன். அப்போது இருந் தே, துர்கேஸ்வரி என்னிடம் பிரச்னை செய்து வந்தார்.
பிரிக்கப்படாத எனது குடும்ப சொத்துக்களில் பங்கு வேண்டும் என்றும், எனது முதல் மனைவி வாழும் வீட்டில் தானும் இருப்பேன் என்றும், தவறும் பட்சத்தில் என் மீது பலாத்கார புகார் கொடுப்பேன் என்றும் மிரட்டத் தொடங்கினார்.
அவரை சமாதானம் செய்து குடும்பம் நடத்தி வந்தேன். இந்த நிலையில் அவர், கர்ப்பமானார். அதன்பின்பு, எனது அரசியல் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டினார். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் துணைமேயர் பதவியை இழந்தேன். அதன்பின்பு, என் மீது போலீசில் புகார் செய்தார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தையின் போதும் குடும்பம் நடத்த சம்மதம் தெரிவித்தேன். அதற்கு துர்கேஸ்வரி மறுத்து விட்டார். எந்தகாலத்திலும் துர்கேஸ்வரியுடன் குடும்பம் நடத்தத்தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
ஆசிக்மீரா, துர்கேஸ்வரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது துர்கேஸ்வரி முஸ்லிம் மதத்துக்கு மாற ஒத்துக்கொண்டுள்ளார். ஆசிக் மீரா தன்னை பகிரங்கமாக திருமணம் செய்து, ஜமாத்தில் பதிய வேண்டும் என துர்கேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
துர்கேஸ்வரியை சட்டப்படி திருமணம் செய்துகொள்வதாகவும், அவரையும், குழந்தையையும் பராமரிப்பதாகவும் ஆசிக் மீரா ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் 2 வாரம் மதுரையில் தங்கி, மதுரை காந்தி மியூசியத்தில் சேவையாற்ற வேண்டும். மேலும், விசாரணைக்கு அழைக்கும்போது போலீஸ் முன் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாகக் கூடாது என உத்தரவிட்டார்.