நான் பாஜக தலைவராக தயார்.. பதவி தந்தால் உடனே ஏற்பேன்.. எஸ்.வி.சேகர் திடீர் அறிவிப்பு!
பாஜக மாநில தலைமை பதவியை ஏற்க தயாராக இருப்பதாக எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Recommended Video
ஸ்ரீவில்லிப்புத்தூர்: பாஜக மாநில தலைவர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்க தயாராக இருப்பதாக நடிகர் எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் வழிபாட்டில் எஸ்.வி.சேகர் இன்று கலந்து கொண்டார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜக மாநில செயற்குழுவிற்கு தமக்கு அழைப்பு இல்லை என்றும் தம்மை விட பிரபலமானவர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது என்றும் கூறினார்.
பொறுப்பை ஏற்க தயார்
பின்னர் தமிழக பாஜக தலைமையை ஏற்க வருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பாஜக தலைமை ஏற்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அதை ஏற்பேன் என்றும், தற்போது என்ன வாக்கு வங்கி பாஜகவுக்கு உள்ளதோ அதைவிட அதிகமாகவே தம்மால் வாங்கு வங்கியை என்னால் வாங்கி காட்ட முடியும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
ஊர்கூடி தேரிழுக்க வேண்டும்
அப்போது செய்தியாளர்கள், தமிழிசையின் தலைமையை ஏற்க வருவீர்களா என மீண்டும் அழுத்தமாக அதே கேள்வியை கேட்டனர். அதற்கு எஸ்.வி.சேகர், "அப்படியெல்லாம் இல்லை, இதற்காக தினமும் தமிழிசை வீட்டு வாசலில் நிற்க வேண்டுமா என்ன? என கேள்வி எழுப்பியதுடன், ஆனால் ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும்" என்றார்.
அதிமுக-பாஜக
தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர், "அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒரே கொள்கைதான் என்றும், எனவே இரு கட்சிகளும் கூட்டணி வைத்தால் நல்லதுதான்" என்றும் தம் கருத்தை தெரிவித்தார்.
கட்சிக்குள் சலசலப்பு
ஏற்கனவே எசகுபிசகாக பேசிவிட்டு அதற்காக வழக்குகளையும் சந்தித்து வரும் எஸ்.வி.சேகர், தற்போது மாநில பாஜக தலைமை பதவி பற்றி பேசுவதும், பின்னர் அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்த தன் கருத்தை சொன்னதும் அதிமுக, பாஜக இரு கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படி இருப்பினும் நோட்டாவிடமிருந்து பாஜகவை காக்க எஸ்.வி.சேகரால் முடிந்தால் அது பாஜகவுக்கு நல்லதுதானே!