ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை.. சென்னையில் பயங்கரம்.. மர்மகும்பலுக்கு வலை வீச்சு
சென்னை பள்ளிக்கரணையில் ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தப்பியோடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை: சொந்த திருமண மண்டபத்தில் அமர்ந்திருந்த ரியல் எஸ்டேட் அதிபர் சங்கரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார். பள்ளிக்கரணையில் சொந்தமாக திருமண மண்டபம் ஒன்று கட்டி அதனை வாடகைக்கு விட்டு வருகிறார். நிலங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்ட இவருக்கு வியாபார போட்டிகளும் எதிரிகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று வழக்கம் போல தனது திருமண மண்டபத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மண்டபத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல் சங்கரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அங்கேயே சரிந்தார்.
வந்த வேலையை முடித்துவிட்ட மர்ம நபர்கள் அங்கிருந்த காரில் தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக சங்கர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தப்பியோடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.