தேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா?
தமிழக இடை தேர்தல்களில் பாஜக குறைவான வாக்குகள் பெற்றாலும் 3-வது இடத்தை பிடித்துள்ளன.
சென்னை: இடைத்தேர்தல்களில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து 3-வது இடத்தில் முன்னேறியுள்ளதாக பாஜக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அலப்பரையை கூட்டி வருகின்றனர். பாஜக அதிமுக, திமுகவுக்கு அடுத்த 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாஜக முன்னேறிவிட்டதா? என நீங்களே பாருங்கள்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் தொகுதிகளுக்கான மறு மற்றும் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த 3 தொகுதிகளிலுமே அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக 88,068; திமுக 64,,395 வாக்குகள் பெற்றுள்ளன. இந்த 2 பிரதான கட்சிகளுக்கு அடுத்து 3-வது இடத்துக்கு உண்மையிலேயே பாரதிய ஜனதாதான் வந்துள்ளது. அது பெற்றுள்ளது மொத்தம் 2,803 வாக்குகள்தான். இத்தொகுதியில் தேமுதிகவின் வேட்பாளர் 1176 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
லைட்டாக ஏறுமுகம்...
3-வது இடத்தை முட்டி மோதி எட்டிப் பிடித்த பாஜகவால் டபுள் டிஜிட் பக்கம் போக இன்னும் பல தேர்தல்கள் ஆகும் என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 2011 தேர்தலில் பாஜகவின் ராமன் மொத்தம் 1,626 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒப்பீட்டளவில் இம்முறை அரவக்குறிச்சியில் லைட்டாக பாஜக ஏற்றம் கண்டிருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில்...
திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 1,13,032; திமுக 64,395 வாக்குகளைப் பெற்றுள்ளன; 3-வது இடத்தை பிடித்துள்ள பாஜக பெற்றிருக்கும் வாக்குகள் எண்ணிக்கையோ வெறும் 6930தான்..
சிலபடிகள்...
கடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் திருப்பரங்குன்றத்திலும் பாஜகவுக்கு கொஞ்சம் ஏறுமுகம்தான்... கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 3536 வாக்குகளைப் பெற்றது. இம்முறை சிலபடிகள் முன்னேறி 6930ஐ தொட்டிருக்கிறது.
3-வது இடத்தில்...
தஞ்சாவூர் தொகுதியிலும் பாஜக கடந்த 2011 தேர்தலை ஒப்பிடுகையில் ஏறுமுகம் என்றே கூறலாம். தற்போதைய தேர்தலில் அதிமுக- 1,01,333; திமுக; 74,487 வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. 3-வது இடத்துக்கு வந்துள்ள பாஜக 3806 வாக்குகளைத்தான் பெற்றுள்ளது. ஆனாலும் கடந்த 2011 தேர்தலில் 1894 வாக்குகளைப் பெற்ற பாஜகவுக்கு இது நிச்சயம் ஏறுமுகம்தான்..
பொய் பிம்பம்
ஆக பாஜக 3-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது உண்மைதான்... ஆனால் அதிமுக- திமுகவுக்கு மாற்றாக முன்னேறிவிட்டது என பிம்பம் கட்டமைக்கப்படுவது சகிக்க முடியாத பொய்மூட்டை என்பதே யதார்த்தம்.