நெல்லை அ.தி.மு.க.,வில் நீடிக்கும் குழப்பம் : அணி மாறத் தயாராகும் தொண்டர்கள்
எம்.பி விஜிலா சத்யானந்த் அணி மாற்றத்தால் நெல்லை அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை : எம்.பி விஜிலா சத்தியானந்த் அணி மாறியது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பலர் அணி தாவ தயாராகி வருவதால் நெல்லை அ.தி.மு.க.,வில் உச்ச கட்ட குழப்பம் நிலவி வருகிறது.
தமி்ழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அணியினர் இரண்டாகப் பிரிந்ததால் கட்சியும், சின்னமும் தற்காலிகமாக முடக்கப்பட்டது. நீண்ட முயற்சிக்கு பின்னர் இரு அணியினரும் ஒன்றாக இணைந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கியது.
இதனால் தனியாகச் செயல்பட்டு வந்த தினகரன் அணியினர் பலர் அணி தாவி வருகின்றனர். இதில் இருந்த 18 எம்.எல்.ஏ.,க்கள் ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். மேலும் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்தனர்.
இந்நிலையில், தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் எடப்பாடியை சந்தித்து அவரது முன்னிலையில் ஒருங்கிணைந்த அதிமுகவில் சேர்ந்தனர். இதில் விஜிலா சத்தியானந்த் அணி மாறியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பல அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் விஜிலா சத்தியானந்த் புறக்கணிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் லேப்டாப் வழங்கிய பள்ளியில் எடப்பாடி அணியினர் மீண்டும் புகுந்து லேப்டாப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இவருக்கு அரசு சார்பில் எந்த சலுகையும் கொடுக்கப்படாது என்று உள்ளூர் அ.தி.மு.க.,வினர் தெரிவித்து வந்ததாகவும் தெரிகிறது. எம்.பி பதவி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் எடப்பாடி அணியினரை பகைத்தால் பதவியை தொடர முடியாது என்று கருதி அவர் அணி தாவி விட்டதாக கூறப்படுகிறது. இது போல் மேலும் பலர் நெருக்கடி காரணமாக அணி தாவ தயார் ஆகி வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.