ராம்குமார் இறந்தது எங்கே? புழல் சிறையில் விசாரித்த ஏடிஜிபி - நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை
சென்னை: ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை நடத்தினர்.ராம்குமார் அவரது அறையில் இருந்து வெளியே சென்றது ஏன், மற்றும் சிறையிலேயே அவர் இறந்துவிட்டாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாரா என்று மனித உரிமை ஆணையரும், சிறைத்துறை ஏடிஜிபியும் புழல் சிறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் உள்ள டிஸ்பென்சரி செல்லில் அடைக்கப்பட்டிருந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை முயற்சி எதுவும் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் சிறை காவலர்கள் இருவர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த ஞாயிறன்று அறையிலிருந்து தண்ணீர் குடித்துவிட்டு வருவதாக வெளியில் சென்ற ராம்குமார் அங்கிருந்த மின்சார பெட்டியை உடைத்து, வயரை பல்லால் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்ட அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உறவினர்கள் போராட்டம்
இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராம்குமார் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாமல் உடலை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ராம்குமாரின் பெற்றோர் கூறிவருகின்றனர். ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனைச் செய்ய உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மனித உரிமை ஆணையர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை தலைவர் விஜய்குமார், மனித உரிமை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் புழல் சிறையில் நேற்று விசாரணை நடத்தினார்கள். சிறை அதிகாரிகளிடமும், சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவலர்களிடமும் தீவிர விசாரணை
ராம்குமார் தற்கொலை தொடர்பாக சிறைத்துறை தலைவர், மனித உரிமை ஆணையர் ஆகியோர் புழல் சிறையில் விசாரணை நடத்தினர்.
ராம்குமார் தங்கியிருந்த அறையில் ஆய்வு
சிறைத்துறை ஏடிஜிபி விஜயகுமார் மற்றும் மாநில மனித உரிமை ஆணையர் எஸ்பி பாஸ்கரன் இருவரும் தனித்தனியாக புழல் சிறைக்கு சென்று ராம்குமார் தங்கி இருந்த அறையையும், அவர் தற்கொலை செய்துகொள்வதற்காக உடைத்த மின்சார பெட்டி, கடித்த மின்சார வயர் ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கைதிகளுடன் விசாரணை
ராம்குமாருடன் தங்கியிருந்த கைதிகள், பக்கத்து அறையில் இருந்த கைதிகள், அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக் காவலர் பேச்சிமுத்து, டாக்டர் நவீன் ஆகியோரிடம் விசாரித்தனர். ராம்குமார் கடைசியாக யாருடன் பேசினார், கடைசியாக எங்கே சென்றார் என்று பல்வேறு கோணங்களில் ஒரு மணி நேரம் தனித்தனியாக விசாரித்தனர். இதனால் சிறை வளாகத்தில் உள்ள மற்ற கைதிகளிடமும் பரபரப்பு ஏற்பட்டது.
கைதிகள் அச்சம்
கடந்தாண்டு செப்டம்பர் 25ம் தேதி இந்த சிறையில் இருந்த தீவிரவாதிகள், அப்போதைய ஜெயிலர் இளவரசன் மற்றும் சிறைக்காவலர்கள் 3 பேரை தாக்கினர். அப்போது சிறைக்காவலர்கள் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டங்கள் நடத்தினர். இதன்பின் சிறைக்குள் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், சிறைக்குள்ளே கேமராக்கள் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை அதை செய்யாததால் இந்த சம்பவங்கள் தொடர்கின்றன என்று சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விசாரணை நடத்தியதால் புழல் சிறை வளாகத்தில் பொதுமக்கள் யாரையும் கைதிகளை பார்க்க அனுமதிக்கவில்லை. சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
மரணம் நிகழ்ந்தது எங்கே?
சுமார் ஒரு மணிநேரம் நடந்த விசாரணையில் ராம்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஏடிஜிபி எழுப்பியதாக தெரிகிறது. அதன்படி ராம்குமார் அவரது அறையில் இருந்து வெளியே சென்றது ஏன், மற்றும் சிறையிலேயே அவர் இறந்துவிட்டாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாரா, மின்சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா என்பன போன்ற பல கேள்விகளை ஏடிஜிபி எழுப்பியுள்ளார்.
விசாரணை அறிக்கை
விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்த பின்னர் பணியில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. மனித உரிமைகள் ஆணைய கண்காணிப்பாளர் பாஸ்கரனும் அவர் தனது அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு விரைவில் அனுப்புவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.