ஸ்கூல் பஸ் டிரைவர்களை வைத்து சிறப்பு பேருந்து இயக்கம்... பள்ளிகள் விடுமுறையின் பின்னணி பிளான்!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சமாளிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்களை வைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாலேயே நாளை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட
Recommended Video
சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சமாளிக்க முடியாமல் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்களை வைத்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாலேயே நாளை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளி ஓட்டுனர்கள் கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியுள்ள அரசு, கல்வி நிறுவனங்களின் பேருந்துகளையே சிறப்பு பேருந்துகளாக இயக்க பள்ளி, கல்லூரிகளை நிர்பந்திப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 காரணி ஊதிய உயர்வு, ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன போக்குவரத்து தொழிற்சங்கங்கள். 2.44 காரணிக்கு மேல் தர முடியாது, 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்யப்படும் என்று அரசும் தனது முடிவை தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் இரண்டு தரப்பின் சண்டையால் மக்கள் 8 நாட்களாக போக்குவரத்துக்கு அல்லாடி வருகின்றனர். இதில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசின் மீது ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கும் மக்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாவிட்டால் மேலும் கோபம் அடைந்துவிடுவார்கள் என்பது அரசுக்கு தெரிந்திருக்கிறது.
புதிய நடைமுறை
இதனால் தமிழர் கலாச்சாரம், பண்பாடு என்றெல்லாம் காரணம் கூறி எந்த ஆண்டிலும் இல்லாத திருநாளாக இந்த ஆண்டு மட்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்கு சிறப்பு காரணம் சொல்லி நாளை முதலே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அரசு. வழக்கமாக பொங்கல் முதல் 3 நாட்களுக்குத் தான் அரசு விடுமுறை, ஆனால் முன்கூட்டியே அரசு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளதற்கான காரணம் என்ன என்பது வெளிவரத் தொடங்கியுள்ளது.
பள்ளி விடுமுறை பின்னணி என்ன?
பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டும் டிரைவர்களை வைத்து சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்ற அரசின் அதிரடி திட்டம் தான் நாளை முதலே பள்ளிகள் விடுமுறைக்குக் காரணமாம். மற்றபடி தமிழர் கலாச்சாரத்தை கொண்டாடுவதற்காக அளிக்கப்பட்ட விடுமுறை என்பதெல்லாம் வீண் பேச்சுகள் தானாம்.
ஓட்டுனர்கள் கணக்கெடுப்பு
தனியார் பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுனர்கள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ள அரசு, மொத்தம் எத்தனை ஓட்டுனர்கள் உள்ளார்களோ அதற்கு ஏற்ப பேருந்துகளை இயக்கலாம் என்று திட்டமிட்டுள்ளதாம். இதில் மற்றொரு திடுக்கிடும் விஷயம் என்னவென்றால் அரசுப் பேருந்துகளை இயக்காமல் கல்வி நிறுவனங்களின் பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக பயன்படுத்த அரசு நிர்பந்தித்து வருகிறதாம்.
கல்விநிறுவனங்கள் குற்றச்சாட்டு
கல்வி நிறுவனங்களின் பேருந்துகளை பொது பயன்பாட்டிற்கு விட்டால் பேருந்தின் பராமரிப்பு கெட்டு போய்விடும் என்று சிலர் தயக்கம் காட்டும் நிலையில், அவர்களை அரசு நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பிரச்னையை தீர்த்து வைக்காமல், தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பயணிகள் உயிரோடு விளையாடும் அரசின் அடுத்த பிளானாவது கைகொடுக்குமா, அல்லது சொதப்பலில் முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.