மானாமதுரை அருகே வீடுகளை இழந்த தலித்களுக்கு நிவாரணம்: எஸ்சி, எஸ்டி கமிஷன் உத்தரவு
பாப்பங்குளம்: கிராமத்தில் வீடுகளை இழந்த தலித்களுக்கு அதே இடத்தில் புதிய வீடு கட்டித்தருவதோடு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று ஆய்வு செய்த மத்திய எஸ்சி/எஸ்டி கமிசன் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பாப்பாங்குளத்தில் கடந்த ஆகஸ்ட் 18ம்தேதி தலித் மக்களின் வீடுகளை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக இடித்து தள்ளினார்.
இது தொடர்பாக தேசிய எஸ்சி/எஸ்டி கமிசன் உறுப்பினர் சிவண்ணா தலைமையில் இணை செயலாளர் சீத்தன், சென்னை எஸ்சி/எஸ்டி கமிசன் இயக்குனர் வெங்கடேசன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதுவரை அரசு சார்பில் செய்யப்பட்ட உதவிகள் என்ன என்று கலெக்டர் ராஜாராமன், எஸ்பி அஸ்வின் கோட்னீஸ் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவண்ணா கூறியதாவது:
சின்ன சிறிய கிராமம் இது, இதில் ஆக்ரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடித்துள்ளனர். வீடுகள் இடிக்கப்பட்ட போது பணியில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் டிஎஸ்பி (வெள்ளதுரை) யோ அல்லது போலீசாரோ யார் இருந்தாலும் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும், சாதாரணமாக ஒரு லட்சம் , இரண்டு லட்சம் கொடுக்க கூடாது , சேத மதிப்பீட்டின் படி நிவாரணம் வழங்க வேண்டும், புதிய வீடுகள் அதே இடத்தில் கட்டி தரவேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும், எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது , மகளிர் குழு மூலம் கறவை மாடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நிலம் இல்லாத எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இலவசமாக 2ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் உள்ளது அதன்படி வழங்க வேண்டும் என்றார்.