கண்டனக் கூட்டத்தில் குமுறிய ஸ்ரீப்ரியா, நளினி...ஃபிளாஷ்பேக் மேட்டர் இது தான்!
சென்னை : நடிகைகள் குறித்து கடந்த 2009ல் எழுந்த சர்ச்சை செய்தியை கண்டித்து நடத்தப்பட்ட கண்டனப் பொதுக்கூட்டத்தில் நடிகைகள் ஸ்ரீப்ரியா, நளினி குமுறிக் கொட்டிய தகவல்களை இங்கே நினைவுபடுத்தி பார்ப்போம்.
கடந்த 2009 அக்டோபர் மாதத்தில் நாளேடு ஒன்று நடிகை புவனேஸ்வரி கொடுத்த தகவலின்படி நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீப்ரியா, நளினி உள்ளிட்டோர் பற்றி செய்தி வெளியிட்டது. திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் சார்பில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்று பேசிய நடிகை ஸ்ரீப்ரியா 'நான் 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி தவறாக எழுதியவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள். நாங்களும் சாதாரண பெண்கள்தான். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறீர்களே, எங்கள் வயிற்றெரிச்சல் சும்மா விடாது. எங்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. திரைக்குப் பின்னால் நாங்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம்.
கொந்தளித்த ஸ்ரீப்ரியா
விபச்சாரத்தில் ஈடுபடுவதாக என் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இதற்கு பிறகும் மௌனமாக இருந்துவிட்டால் அது என் கனவருக்கும், குடும்பத்தாருக்கும் செய்யும் துரோகம் ஆகிவிடும். நான் தைரியமான பொண்ணுதான். ஆனால் நானும் மனுஷிதானே. பெண்கள் என்பதால் எங்களை அவமானப்படுத்தும் உங்களையெல்லாம் எல்லா கெட்ட வார்த்தையையும் சொல்லி திட்டலாம், என்று கண் கலங்கினார்.
நியாயமா?
நடிகைகள் பற்றிய செய்தியில் இடம்பெற்றிருந்த நளினியும் கணவர் ராமராஜரை பிரிந்து வாழும் நிலையில் வெளியான செய்தியால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுவிட்டதாக புலம்பினார். "ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா நான். என்னைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுறாங்களே, என் பிள்ளைகள் மனசு என்ன பாடுபடும். இப்படியெல்லாம் செய்வது நியாமா? இந்தப் பிரச்னை இத்தோடு நின்றுவிடுமா, இதை நான் தைரியமாக எதிர்ப்பேன். என்னைப் பத்தி எழுதினவர் கையில் கிடைச்சா கைம்மா தான் என்று பொங்கினார்.
கண்ணீர் விட்ட சீதா
திரை நடிகைகளில் முன்னணி நட்சத்திரப் பட்டியலில் இருந்த சீதா இந்தப் பிரச்னையால நான் மிகவும் உடைஞ்சு போயிட்டேன் என்று கண்கலங்கிவிட்டார். "நெனச்சு நெனச்சு ரொம்ப வேதனையாருக்கு. என்னால தாங்க முடியல. எங்களுக்கும் குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு என்பது ஏன் புரியமாட்டேங்குது. எங்க மனச ஏன் புரிஞ்சுக்கல" என்று வெகுண்டெழுந்தார்.
கிளறும் குப்பை
தனிப்பட்ட முறையில் நடிகைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் செய்தியை வெளியிட்டதற்காக 2009ல் கடும் கண்டனங்களுக்கு ஆளான பத்திரிக்கைக்கு எதிராக திரைத்துறையினர் திரண்டதால் பல ஆண்டுகளாக அந்தப் பத்திரிக்கையில் சினிமாத் துறையினர் பற்றிய செய்திகள் இடம் பெறவேயில்லை. இந்த நிலை மாறி தற்போது நடிகர்கள் பற்றி செய்தி இடம்பெற்று வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவு பழைய நினைவுகளை கிளறியுள்ளது என்றே சொல்லாம்.