பீதியை கிளப்பும் கரோனா காய்ச்சல்... விமான நிலையங்களில் தீவிர உடற்பரிசோதனை
சென்னை: சீனாவில் கரோனா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அந்நாட்டில் இருந்து தமிழகம் வருபவர்களிடம் தீவிர உடற் பரிசோதனை செய்யப்படுகிறது.
நிம்மோனியாவை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு செல்லக் கூடிய கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
சாதாரணமாக சளியில் தொடங்கி படிப்படியாக மரணம் வரை கொண்டு செல்லும் கரோனா வைரஸ் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
நோய்தடுப்பு
சீனாவில் கடந்த ஒரு மாதமாக கரோனா காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து தமிழகம் வருபவர்களிடம் தீவிர உடற் பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனர்கள் மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடமும் இந்த சோதனை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
அறிகுறி
கரோனா வைரஸை பொறுத்தவரை சாதராண சளி, காய்ச்சலில் தொடங்கி நிம்மோனியா வரை கொண்டு சென்று மரணத்தை கொடுக்கக்கூடிய கொடிய தன்மை உடையது. இதனால் இதனை பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
சுற்றுலா பயணிகள்
இதனிடையே இந்த மாதத்தின் இறுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் சீனாவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதற்குள் கரோனா காய்ச்சலை கட்டுக்குள் வைக்க சீன அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
2020-ம் ஆண்டு
கடந்த 2002-ம் ஆண்டு சீனாவில் இருந்து சார்ஸ் வைரஸ் பரவ தொடங்கிய நிலையில், சரியாக 18 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் புதிய வகை வைரஸான கரோனா வைரஸ் அதே சீன நாட்டில் இருந்து பரவத்தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.