கோவை: ம.ம.க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளு முள்ளு – தமீமுன் அன்சாரி அணியால் பிரச்சினை
கோவை: கோவையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜவாஹிருல்லா மற்றும் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையை அடுத்த குனியமுத்தூரில், மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ள ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வந்தார். அப்போது தமீமுன் அன்சாரியின் ஆதரவாளர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு ஜவாஹிருல்லா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்களுக்கிடையே சமாதானம் ஏற்படவில்லை. இதனால் பொதுக்குழு கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினர் அரசியல் நிலைப்பாட்டிற்காக ‘மனிதநேய மக்கள் கட்சி' என்ற புதிய அரசியல் அமைப்பை கடந்த தேர்தலின் போது துவக்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 3 இடங்களில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஒரு இடத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது. இதன் பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. மதிமுக,கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தில் இணைந்து பல போராட்டங்களில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்றது.
கூட்டணியில்லை
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தேர்தல் கூட்டணியாக மாறும் என்று வைகோ அறிவித்ததும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா இதற்கு மறுப்பு தெரிவித்தார். மூன்றாவது அணிக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று வறிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆகிய இரு கட்சி கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
கருத்து வேறுபாடு
இதனால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மக்கள் கூட்டியக்க போராட்டங்களில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரிக்கும், கட்சி தலைமைக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்சி இரண்டாக உடையும் நிலை உருவானது. இதன் ஒரு பகுதியாக கடந்த 6ம் தேதி தாம்பரம், எழும்பூரில் இரண்டு இடங்களில் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. இது மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
கட்சியில் இருந்து நீக்கம்
தாம்பரத்தில் கூடிய பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தமீமுன் அன்சாரியும், இணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அருண் ரஷீத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் கட்சியில் உறுப்பினர்களாக நீடிக்க எந்த வித தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார்.
தஞ்சையில் பொதுக்குழு
இதனிடைய தமீமுன் அன்சாரி தலைமையில் கடந்த 11ம் தேதி தஞ்சையில் மனித நேய மக்கள் கட்சி போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மனித நேய மக்கள் கட்சியின் கொடியுடன் பங்கேற்றனர்.
கண்டன தீர்மானம்
மேற்கு தாம்பரத்தில் கடந்த 6ந் தேதியன்று பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தியவர்களை பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கட்சி பொது செயலாளர், இணை பொது செயலாளர் ஆகியோரை நீக்கியதாக அறிவித்ததை கண்டிப்பதுடன் தமிமூன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் மீது முழு நம்பிக்கை வைத்து கட்சியை இன்னும் எழுச்சியுடன் வழி நடத்தி செல்லும்படி பொது செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகளை பொதுக்குழு கேட்டு கொள்கிறது என தஞ்சையயில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை பொதுக்குழு
இதனிடையே இன்று கோவையில் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தமீமுன் அன்சாரியின் ஆதரவாளர்கள் பங்கேற்று முழக்கமிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து பேசிய ஜவாஹிருல்லா, கோவையில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்தை தமிமுன் அன்சாரி ஆதரவாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு தடுத்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது என்றார். அதே நேரத்தில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்களோ, இரு அணியினரும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே விரைவில் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர்.