கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீர்ந்து விடாது - பொன். ராதாகிருஷ்ணன்
கச்சத்தீவை மீட்டு விட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை: ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்ஜோ படுகொலைக்கு நீதி கேட்டு மூன்று நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்று தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை போராட்டக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். மீனவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க தமிழர்கள் ஒன்று சேரலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவதோடு கச்சத்தீவை மீட்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கச்சத்தீவை மீட்பதன் மூலம் மட்டும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடுமுழுவதும் பயங்கரவாதிகள் மாறுவேடங்களில் ஊடுருவியுள்ளதாக கூறினார். மேலும் அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தான் எச்சரித்ததாகவும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.