ஆந்திரா டூ கோடியக்கரை, அங்கிருந்து இலங்கை...சீன மாபிஃயாவின் செம்மர கடத்தல் ரூட்!
சென்னை: செம்மர கடத்தல் பின்னணியில் சீன நாட்டு மாஃபியா உள்ளதாக கூறுகின்றனர் இந்திய உளவு அமைப்பினர்.
சீனாவை சேர்ந்த மாஃபியாக்கள், செம்மரங்களை வெட்டி எடுத்து, அதை கோடியக்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதாக தெரியவந்துள்ளது.
பெரிய துறைமுகங்களில் இருந்து கடத்தினால் பிடிபட்டுவிடுவோம் என்ற அச்சத்தால், கோடியக்கரையை தேர்ந்தெடுத்துள்ளன சீன மாஃபியா கும்பல்கள்.
இலங்கை செல்லும் செம்மர துண்டுகள், அங்கிருந்து சீனா, ஜப்பான் மற்றும் பல கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக உளவுத்துறை கூறுகிறது.
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றபோதிலும், செம்மரங்கள், கதிர்வீச்சு அபாயத்தில் இருந்து காப்பாற்றும் மூலப்பொருளை கொண்டிருப்பதாக உலகளவில் நம்பிக்கையுள்ளது. இதுவும் கடத்தலுக்கு முக்கிய காணம். ஒரு டன் செம்மர கட்டை ரூ.10 லட்சம் வரை விலைபோகிறதாம்.
சீனாவை சேர்ந்த மாஃபியாக்கள் எப்போதாவது ஒருமுறை இந்தியா வந்து பிறகு திரும்புவதில்லை என்பதால் அவர்களை அமுக்கி பிடிப்பது கஷ்டமாக உள்ளது.
2013ம் ஆண்டில், டெல்லி ஏர்போர்ட்டில் மட்டும் 18 ஆயிரம் கிலோ செம்மரங்கள் மீட்கப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் இதுவரை மொத்தம் 30 ஆயிரம் கிலோ செம்மரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதான அனைவருமே சீனர்கள். இதுவரை 35 சீனர்கள் கைதாகியுள்ளனர்.
நம் நாட்டில், செம்மரம் பொதுவாக ஆந்திராவின் தெற்கு பகுதியான திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மட்டுமே அதிகம் கிடைப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.