எப்படி வேணா போட்டோ எடுங்க... தெனாவெட்டாக போஸ் கொடுத்த செம்மரக்கடத்தல் டி.எஸ்.பி. தங்கவேலு!
வேலுார்: செம்மரக் கடத்தலில் சிக்கிய டி.எஸ்.பி., தங்கவேலுவை, இரண்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, ஆம்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட டி.எஸ்.பி தங்கவேலு அதே அதிகார தோரணையோடு நடந்து கொண்டார். தன்னை புகைப்படம் எடுக்க முற்றுகையிட்ட செய்தியாளர்களிடம் ஆவேசத்தோடு பேசியதோடு எப்படிவேண்டுமானாலும் போட்டோ எடுங்க என்று கோபத்தோடு கூறினார்.
போலீஸ் விசாரணையில் செம்மரக் கடத்தலின் பின்னால் உள்ள பெரும்புள்ளிகள் குறித்த தகவல்களை தங்கவேலு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஆம்பூரை அடுத்த மாதனூர், பாலூரை சேர்ந்தவர் சின்னபையன், பா.ம.க. பிரமுகரான இவர் செம்மர கடத்தல் தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் - ஜோதிலட்சுமி தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சின்னபையனின் கொலை பின்னணியில் வேலூர் கலால்துறை டி.எஸ்.பி. தங்கவேலு இருப்பதும், அவருக்கு செம்மர கடத்தலில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை காட்பாடி அருகே ஆம்பூர் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து வேலூர் மத்திய சிறையில் டி.எஸ்.பி. தங்கவேலு அடைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது செம்மர கடத்தலில் 4 முக்கிய பிரமுகர்கள், 5 அரசியல் பிரமுகர்கள், 11 போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
நாகேந்திரனும், ஜோதிலட்சுமியும் கூறியதின் அடிப்படையில் சின்னபையனின் கோழிப்பண்ணையில் இருந்து டி.எஸ்.பி. செம்மரங்களை கடத்தியதும் அதுவே சின்னபையனின் கொலைக்கு காரணமானதும் தெரியவந்தது.
இந்தநிலையில் சிறையில் இருந்து டி.எஸ்.பி. தங்கவேலுவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வெளியே கொண்டு வந்த போலீசார் அவரை வேனில் ஏற்றினர். அப்போது அவர் செய்தியாளர்கள் போட்டோகிராபர்களை பார்த்து, தன்னை பற்றி தவறாக செய்தி வருவதாக கூறி ஆவேசமடைந்தார். என்னை எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
குறையாத தோரணை
டி.எஸ்.பி., தங்கவேலுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது அதே அதிகார தோரணையோடு சென்றார். போலீசாருடன் சிரித்து பேசியபடி சென்ற காட்சியையும், அவர் பின்னால், போலீசார், 'சென்ற காட்சியையும் பார்த்து, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டும் டி.எஸ்.பி., தோரணையிலேயே நடந்துக்கிறாரே?' என, பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் காவலுக்கு எதிர்ப்பு
ஆம்பூருக்கு நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்தராஜன் முன்பு தங்கவேலு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது டி.எஸ்.பி. தங்கவேலு சார்பாக மதுரையை சேர்ந்த வக்கீல்கள் ஆனந்தன், குணசேகரன், அரிமுத்து ஆகியோர் ஆஜராகி டி.எஸ்.பி.யை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். டி.எஸ்.பி. தங்கவேலுவை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என்று 1 மணிநேரம் வாதாடிய வக்கீல்கள் டி.எஸ்.பி.யை ஜாமீனில் விடக்கோரி மனு கொடுத்தனர்.
2 நாள் போலீஸ் காவல்
இந்த நிலையில் பிற்பகலில் டி.எஸ்.பி.யை போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது டி.எஸ்.பி.யை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தும் வருகிற 18ம் தேதி மதியம் 2.15 மணிக்கு டி.எஸ்.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி நீதிபதி ஆனந்தராஜன் உத்தரவிட்டார். டி.எஸ்.பி.யை ஜாமீனில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 18ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.
சிக்கலில் யார் யார்
இரண்டு நாள் போலீஸ் விசாரணையில் செம்மரக் கடத்தலில் தொடர்புடைய அரசியல் பிரமுகர்கள், போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பற்றிய திடுக்கிடும் தகவல்களை, டி.எஸ்.பி., தங்வேலு வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.