வயாகரா தயாரிக்க பயன்படுத்தப்படும் செம்மரங்கள்... 4 ஆண்டுகளில் ரூ.500 கோடி மரங்கள் கடத்தல்!
சென்னை: அமெரிக்காவில் செம்மர பட்டையில் இருந்து வயாகரா தயாரிக்கின்றனர். சீனாவிலும் உடல் வலிமைக்காகவும் மருந்து தயாரிக்கின்றனர். எனவேதான் செம்மரத்திற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம் உள்ளது. தற்போது தமிழக - ஆந்திர எல்லையில், செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக அதிகரித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெயிலை ஈர்த்து குளிர்ச்சியை கொடுக்கும் சக்தி செம்மரத்திற்கு உண்டு. இதனால், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், ஏமன், சீனா போன்ற நாடுகளில் செம்மரங்களில் கட்டில், மேஜை செய்கின்றனர். செம்மரத்திற்கு சர்வதேச சந்தையில் விலை அதிகம். செம்மரத்தில் பல ரகங்கள் உள்ளன. ரகங்களுக்கு தக்கபடி விலை நிர்ணயிக்கின்றார்கள். சாதாரண செம்மரம், ஒரு டன் 10 லட்சம் ரூபாய்க்கும், முதல் தர செம்மரம் ஒரு டன் 40 லட்சம் முதல் 90 லட்சம் ரூபாய் வரை, விற்பனையாகிறது.
செம்மரத்தின் வலிமை
வேங்கை மரத்தின் ஓர் இனம் தான் செம்மரம். அந்த மரத்தின் மத்தியில், உருவாகும் ஒரு பகுதிதான் செம்மரக்கட்டையாக உருவெடுக்கிறது. அதிக எடை கொண்ட இந்த செம்மரம், வளர்ந்து உருவாக 50 ஆண்டுகள் வரை ஆகலாம் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எங்கே கிடைக்கும்?
தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களில் தான் இந்த மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன. பூண்டி ஏரிப்பகுதியில் தொடங்கி கடப்பா வரை உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் செம்மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும், செம்மரம் எப்போதும் பொலிவு மாறாமல் இருப்பதால், அதற்கு நம் நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் அதிக மவுசு உள்ளது.
சட்டவிரோத கடத்தல்
செம்மரத்தின் பயன்பாடுகளை அறிந்து, அதனை அதிக விலை கொடுத்து வாங்க பலர் முன்வருவதால், சட்டவிரோதமாக இந்த மரங்கள் வெட்டப்படுவது அதிகரிக்கிறது. 60 ஆயிரம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரைக்கு விற்கப்படும் ஒரு டன் செம்மரக்கட்டைகளின் மதிப்பு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் போது, ஒன்றரை கோடியாக உயர்ந்து விடுகிறது.
வெளிநாடுகளில் வரவேற்பு
தரம் வாய்ந்த செம்மரங்களுக்கு ஜப்பான், கொரியா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. கொரியாவில் செம்மரக்கட்டையால் வீணை தயாரித்து, திருமணத்தின்போது, மணமகனின் வீட்டார், மணமகளின் வீட்டாருக்கு கொடுப்பது பாரம்பரியமாக உள்ளது.
அணுமின் கதிர்வீச்சு
அணுமின் நிலையங்களில் வெளியாகும் கதிர்வீச்சுக்களை கட்டுப்படுத்தும் சக்தி செம்மரக் கட்டைகளுக்கு இருப்பதாகவும், எனவேதான் ஜப்பானில் இவற்றின் பயன்பாடு பெருமளவில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
வயக்கரா சக்தி
சீனாவில் உடல் சக்தியளிக்கும் மருந்து தயாரிப்பில் செம்மரக்கட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் செம்மர பட்டையில் இருந்து வயாகரா தயாரிக்கின்றனராம். சென்னையில் சில நாட்டு மருந்துக் கடைகளில், கால் கிலோ செம்மரத்தூள் 500 ரூபாய் வரை சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.
செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பதி பதி வனப்பகுதிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் செம்மரக்கடத்தல் தொடர்பாக 1472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன கடத்த முயற்சிக்கப்பட்ட 1535 மெட்ரிக் டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில், கடத்த முயற்சி செய்யப்பட்ட, 500 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
செம்மரக்கட்டை கடத்திய குற்றச்சாட்டில் 3893 பேர் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். கைதானவர்களில் 70 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடத்தல் கும்பல்களும், வனத்துறை அதிகாரிகளுக்கும் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 15 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழக தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நான்கு ஆண்டுகளில் மட்டும் இதுவரை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.