பாளை விளையாட்டு அரங்கில் செயற்கை இழை தடகள ஓடுபாதை... புதுப்பிக்கும் பணியால் வீரர்கள் உற்சாகம்
நெல்லை: பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ரூ. 4 கோடி மதிப்பில் செயற்கை இழை தடகள ஓடுபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் விளையாட்டு வீரர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் மாவட்டம் தோறும் விளையாட்டு விடுதிகள், அரங்குகள் அமைக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுககு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டையில் கடந்த 1978-ம் ஆண்டு தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.
இங்கு வாலிபால், ஜெர்மன் உதவியுடன் செயற்கை புல் ஹாக்கி மைதானம், தடகளம், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், பாக்சிக், ஸ்கேட்டிங், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், பாட்மிட்டன், இன்டேர் ஸ்டேடியம், நீ்ச்சல், பழு தூக்கும் மையம் ஆகியவைகளுக்கு விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இங்குள்ள விடுதிகளில் தங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விளையாட்டு அரங்கத்தில் தடகளம் மைதானம் மற்றும் அரங்கத்தின் உள்கட்டமைப்புகளை புதுப்பிக்க ரூ.4 கோடி ஓதுக்கப்பட்டது. இதையடுத்து தடகள மைதானத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது தடகள ஓடு பாதையில் சிறு கற்களை கொண்டு தார்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் ரசாயன கலவை கொண்டு செயற்கை இழை ஓடு தளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.