அரசியல் மீது திடீர் காதல்.. சினிமாவை துறக்கும் நடிகர்கள்.. ஏன், எதற்கு, எப்படி?
திரையுலகிலிருந்து அரசியலுக்கு வரும் பிரபலங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எதனால் இது நிகழ்கிறது, ஒரு அலசலை பார்ப்போம்
Recommended Video
சென்னை: திரையுலகும், அரசியல் உலகின் பிற நாடுகளில் பிரிந்து இருந்தாலும், பிரிக்கப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் அந்த நிலை இல்லை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, சினிமா தயாரிப்பில் நம்பர் ஒன் நாடு என்று இரண்டிலும் இந்தியா சிறந்து விளங்கும் போது, எப்படி அதனை பிரித்து பார்க்க முடியும். அடிப்படையில் இது தன் மக்களின் நிலைப்பாடு.
"காட்சி ஊடகம் கண்டுபிடிக்காத காலத்தில் நாட்டு நடப்பை பிரதிபலிக்கும் பல செய்திகளை தங்களின் கலைகளின் மூலம் நாட்டிற்கு சொன்னவர்கள் கலைஞர்கள், அவர்களின் பரிணாம வளர்ச்சி தான் நாங்கள், எங்களை விட அரசியலை சிறப்பாக யாரால் புரிந்துக்கொள்ள முடியும்", இதுதான் திரைத்துறையினரின் வாதம். நடிகன் நாடாண்டால் அரசியல் ஞானிகள் நாங்கள் எதற்கு இது அரசியல்வாதிகளின் வாதம்.
பல வருடமாக இரண்டு துறையினருக்கும் இடையே இந்த பனிப்போர் நிகழ்ந்து வருகிறது. முன்பெல்லாம் தங்களின் கருத்துகளை வெளியிட முடியாமல், வெளியிட முறையான வழி இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த இவர்களுக்கு தற்போது வரப்பிரசாதமாக கிடைத்துள்ள டுவிட்டர் எனும் சமூகவலைதளம்.
ஆயுதமாக மாறும் டுவிட்டர்
ஒரு தகவலை அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையிலும், புரிந்துக்கொள்ளும் வகையிலும் தெரியவைப்பதற்காக உருவாக்கப்பட்ட டுவிட்டர், தற்போது துப்பாக்கிகளுக்கு இணையாக உபயோகிக்கப்படுகிறது. வார்த்தை எனும் தோட்டாக்களை கோர்த்து இதனை திரைத்துறையினரும், அரசியல்வாதிகளும் மாறி மாறி சுட்டுக்கொள்கின்றனர். இடையில் ரசிகர்கள் வேறு டுவிட்டரை பீரங்கியாக பயன்படுத்தி இந்த இரண்டு துறையினரை தவிடுபொடியாக்கி விடுகின்றனர்.
உலக அரசியலும், உள்ளூர் கவுன்சிலரும்
எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளும் நன்மையை மனதில் வைத்து தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதனை வழக்கம் போல நம் மனித மனம் தவறுகளுக்காக பயன்படுத்திக்கொள்கிறது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக டுவிட்டரை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெற்றார். இதே பாணியை தான் நமது பிரதமர் மோடியும் கையாண்டு வெற்றி கண்டார். அதிசயமாக பார்க்கப்பட்ட டுவிட்டர் இப்போது பாதாள சாக்கடை அடைப்பு நீக்கம், மெட்ரோ வாட்டர் திறந்துவிடப்படும் நேரம் முதலிய உலக விஷயங்களை, கவுன்சிலர்கள் தங்களின் ஏரியா மக்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவான தளமாக மாறி விட்டது. ஆட்களை பிடிக்க ஐஎஸ் தீவிரவாதிகள் கூட இதனை பயன்படுத்தினர்.
வெளியுலக தொடர்பு
முன்பெல்லாம் அறிக்கைகள் மூலமாகவும், நேர்க்காணல் மற்றும் பேட்டிகள் மூலமாக மக்களை தொடர்புக்கொண்டிருந்த அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தற்போது அவற்றை நம்பியில்லாமல் டுவிட்டரையே சிறந்த தொடர்புத்தளமாக பார்க்கிறார்கள். குறிப்பாக திரைத்துறையை சார்ந்தவர்கள் இதனை தங்களின் ஆதங்கங்களை கொட்டும் இடமாகவே கருதுகின்றனர்.
டுவிட்டர் களம்
கலாய்ப்பு, திரைவிமர்சனம், மீம்ஸ் என பொதுபோக்கிற்காக பயன்படுத்தப்பட்ட டுவிட்டரை தற்போது மக்கள் சமூக பிரச்சனைகளுக்காக பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். சில நொடிகளிலே தங்கள் பிரச்சனைகளை ஹாஷ்டாக்காக உலகளவில் பிரபலப்படுத்தி விடுக்கின்றனர். இது பல நேரங்களில் திரை பிரபலங்களுக்கு சங்கோஜத்தை கொடுத்தாலும், தங்களின் ஆணித்தரமான கருத்துகளை தூக்கி செல்லும் அஸ்திரமாக பார்க்கப்படுவதால் டுவிட்டரிலே தங்களின் செயல்பாடுகளை தெரிவிப்பதை அவர் விரும்பிகின்றனர்.
அரசியலும், சினிமாவும்
தமிழக அரசியல் வரலாறும் கலைத்துறையும் இணைந்து பயணப்பட்டுள்ளதால் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஆரம்ப காலத்தில் அரசியல் கருத்துக்கள் மக்களை சென்று சேர வேண்டும் இதற்கு ஊருக்கு ஊர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நீதிக்கட்சியும், காங்கிரஸும் தீவிரமாக செயல்பட்டு வந்துக்கொண்டிருந்தனர். அந்த காலக்கட்டத்தில் மக்களிடத்தில் கருத்துகளை பாடமாக கூறினால் பதியாது, படமாக பதிய வைக்க வேண்டும் என முடிவெடுத்த பெரியாரும், அண்ணாவும் கூத்து மற்றும் நாடகத்தின் வழியாக தங்கள் கருத்துகளை மக்களிடத்திலே கொண்டு சேர்த்தனர். வெற்றியும் பெற்றனர்.
அரசியல் முகம், சினிமா முகம்
5 மணி நேர சொற்பொழிவுகள் கொடுக்காத தாக்கத்தை 5நிமிட நாடகங்கள் தந்தன. மக்கள் மனதில் கருத்துகளும் ஓங்கி பதிந்தன. அரசியலையும், சினிமாவையும் ஒன்றாக பார்க்க ஆரம்பித்த மக்கள் ஒருக்கட்டத்தில் அரசியல் முகத்தை விட சினிமா முகத்திற்கு மதிப்பை கூட்ட ஆரம்பித்தனர். கதாசிரியர், பாடலாசிரியராக இருந்த கருணாநிதி ஆட்சியை பிடித்தார். அரசியல் முகம் கொண்ட கருணாநிதிக்கு என்ன வரவேற்போ அதை விட அதிக வரவேற்பு சினிமா முகமான எம்ஜிஆருக்கு கிடைத்தது. புத்திசாலித்தனமாக யோசித்த எம்ஜிஆர் தனது அரசியல் முகத்தையும், சினிமா முகத்தை ஒன்றிணைத்தார். மக்களின் மனதில் இன்று வரை நீங்காத இடம்பிடித்தார்.
மக்களின் மனநிலை
உலக அரங்கில் அரசியல் வேறு, சினிமா வேறாக இருக்கும் நிலையில், நம் நாட்டில் இரண்டுமே ஒன்றுடன் ஒன்று பிணைந்துவிட்டது. ஆனால் எம்ஜிஆர் என்ற ஒற்றை ஆளுமையை விசிட்டிங் கார்ட்டாக வைத்துக்கொண்டு சாரை சாரையாக திரையுலக பிரபலங்கள் அரசியலுக்குள் வருவதை அரசியல்வாதிகள் விரும்பவில்லை. இது திரைத்துறையினரின் மீதுள்ள தவறல்ல. அவர்களை ஆதரிக்கும் மக்களின் தவறு. நடிகர்களை மாய உலகிலேயே பார்த்து ரசித்த மக்கள் அவர்களை நிஜ உலகிலும் அதே போல நினைப்பது தான் தவறு.
மார்க்கெட் இழந்த நடிகர்கள்
எந்த துறையாக இருந்தாலும் அதில் ஒரு வசீகரத்தை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். சினிமாவாக இருக்கட்டும், மார்க்கெட்டிங்காக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அனைத்திலும் வசீகரம் தேவைப்படுகிறது. அரசியலுக்கு வரும் சாமானியன் அந்த வசீகரத்தை பெறுவதற்குள் தனது முதுமையை எட்டி விடுகிறான். ஆனால் ஹீரோக்கள் வசீகரத்துடனே வாழ்ந்து தன்னுடைய முதுமையை எட்டும்போது அரசியலில் வந்த தஞ்சமடைகிறார்கள். எம்ஜிஆரை இல்லையா என்று அவர்களின் பிரவேசத்திற்கு கைக்காட்டும் ஹீரோக்கள், அரசியலில் தோற்ற அமிதாப்பச்சன், சிவாஜி, பாக்யராஜ், ராமராஜன் உள்ளிட்டோரை மறந்து விடுகின்றனர்.
கமலும், பிரகாஷ்ராஜூம்
பல நடிகர்கள் மாநில அரசுகளையும், மத்திய அரசையும் டுவிட்டர் வாயிலாகவே திட்டி தங்களின் அரசியல் பிரவேசத்திற்கு காய் நகர்த்தி வருகின்றனர். அதுவே அவர்களுக்கு தற்போது எதிராக மாறி வருவதை காலம் தாழ்ந்து அவர்கள் உணர்ந்துள்ளனர். ஒரு செய்தி குரல் கொடுக்கும்போது மற்ற விஷயத்திற்கு ஏன் குரல் கொடுக்க மறுப்பது ஏன் என மக்களே அவர்களை டுவிட்டரில் எதிர் கேள்வி கேட்பதும், அவர்களின் கருத்துகளை திரித்து பரப்பி விடுவதும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் டுவிட்டர் போராளிகள், சமீபகாலமாக தங்களின் வாளையும், கேடயத்தையும் இறக்கி வைத்து தலைமறைவாக இளைப்பாறி வருகின்றனர்.
மாற வேண்டியது மக்கள்
அது அரசியல், சினிமா, விளையாட்டுத்துறை, அறிவியல் என எந்த துறையாக இருந்தாலும் அந்தந்த துறையில் இருவப்பர்கள் தான் அதில் கால் பதிக்க வேண்டும். இதில் இனம், மொழி, ஜாதி, மதம், குறுக்கில்லை. அந்த துறை சார்ந்தவராக இருந்தால் போது. நம் தேசத்தில் நடக்கும் பல பிரளயங்களுக்கு காரணம் துறை சார்ந்த பொறுப்புகள் துறை சாராதவரிடம் இருப்பது தான். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த முறை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படையில் சில மாற்றங்கள் நிகழ்ந்தால் மட்டுமே சிறப்பான ஆட்சி அமையும். அந்த சிறப்பான ஆட்சி எந்த துறையிலிருந்து வரவேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.