பொய்யுரைத்ததா இலங்கை அரசு?- மீண்டும் தமிழகம் திரும்பி வந்த அகதிகள் குடும்பம்!
ராமேஸ்வரம்: இலங்கைக்கு சென்ற அகதிகள் குடும்பம் ஒன்று மீண்டும் தமிழகம் திரும்பி வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை இன பிரச்னை முடிவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆன பின்னரும் அங்கு வாழும் தமிழர்களுக்கான பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படவில்லை என்பதே அங்கு வாழும் தமிழர்களின் குற்றசாட்டாக உள்ளது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியாவில் அகதியாக தங்கியிருந்து நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் இலங்கைக்கு திரும்பி சென்ற ஒரு குடும்பம் இன்று மீண்டும் அகதியாக தமிழகம் திரும்பி வந்திருக்கிறது.
இலங்கை திரிகோணமலை மாவட்டம் சம்பகிராமம் பகுதியை சேர்ந்த தமிழர் சத்தியசீலன். இவர் தனது மனைவி பரமேஸ்வரி, மகள்கள் மேரி, அஞ்சலிதேவி, விடுதலை செல்வி ஆகியோருடன் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சமுனை பகுதிக்கு அகதியாக வந்திறங்கினார். தகவல் அறிந்த தனுஷ்கோடி போலீஸார், அவர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
இலங்கையில் ராணுவத்திற்கும் விடுதலைபுலிகளுக்கும் இடையேயான போர் நிகழ்ந்து வந்த 1999 ஆம் ஆண்டு சத்தியசீலன் இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கு போர் முடிவுக்கு வந்த நிலையில், சத்தியசீலன் பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திரும்பி சென்றார்.
கடந்த 5 ஆண்டுகளாக இலங்கையில் தங்கியிருந்தும் இலங்கை அரசால் வழங்கப்படும் உதவிகள் ஏதும் தனக்கு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் தனது குடும்பத்துடன் அகதியாக இந்தியாவிற்கு வந்ததாக போலீஸ் விசாரணையின்போது சத்தியசீலன் கூறியுள்ளார்.
இதையடுத்து, சத்தியசீலன் உள்ளிட்ட 5 பேர் மீதும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர்.
மீன்பிடி தடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் விசைப்படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய கடற்படை, கடலோர காவல்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், சுங்கதுறை என பல்வேறு பாதுகாப்பு பிரிவுகள் இந்திய கடல் பகுதியை கண்காணித்து வருகின்றனர். இவர்களது கண்களில் படாமல் இலங்கையில் இருந்து வந்த படகு ஒன்று அகதிகளை தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியில் இறக்கிவிட்டு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நேற்று காலை தங்கச்சிமடம், கண்ணுப்பாடு என்ற கடற்கரை பகுதியில் இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று கேட்பாரற்ற நிலையில் கரை ஒதுங்கி நின்றது. இந்த படகின் எஞ்சின் ஏதும் இல்லாத நிலையில் இதில் வந்த மர்ம நபர்கள் யார் என தெரியாத நிலை நீடிக்கிறது.